Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM
லடாக் பகுதியில் எந்தவிதமான தாக்குதலையும் சமாளிக்க இந்தியா தயார் நிலையில் உள்ளது என்று ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளும் ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், இதுவரையில் முழுதீர்வு எட்டப்படவில்லை. அங்கிருந்த 2 நாட்டு ராணுவத் துருப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன மற்றும் இந்திய ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதுகுறித்து ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த சம்பவத்தால் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தெரியவந்தது. அந்தக் குறைகளை தற்போது முழுமையான நிலையில் தெரிந்துகொண்டோம். மேலும் சீனாவின் சாதகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் அறிந்து கொண்டுள்ளோம்.
தற்போது இந்தப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு எந்தவிதமான சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராகியுள்ளோம். முன்பை விட சிறப்பான முறையில் தயாராகி இருக்கிறோம்்” என்றார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT