நில ஆக்கிரமிப்பு விவகாரம்: எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்த தெலங்கானா முன்னாள் அமைச்சர்

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்த தெலங்கானா முன்னாள் அமைச்சர்
Updated on
1 min read

தெலங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் நீண்ட ஆண்டு களாக முதல்வர் சந்திரசேகர ராவுடன் பங்கேற்று வந்தவர் ஈடல ராஜேந்தர். பின்னர் தெலங்கானா மாநிலம் உருவானதும், டிஆர்எஸ் கட்சியில் இவரின் பங்கு முக்கிய மாக கருதப்பட்டது.

தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில், முதலில் நிதி அமைச்சராகவும், இரண்டாவது முறையாக சுகாதார துறை அமைச்சராகவும் ராஜேந்தர் பதவி வகித்தார். இந்நிலையில், இவர் மீது நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் பகிரங்க விசாரணைக்கு உத்தரவிட்டார். அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதனால், முதல்வருக்கும், ஈடல ராஜேந்தருக்கும் இடையே மோதல் வெடித்தது. நேரில் அழைத்து நடந்த விஷயங்களை கேட்காமலேயே அமைச்சர் பதவியை பறிப்பதா என ஈடல ராஜேந்தர் தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.

இதனிடையே, டெல்லி சென்று பாஜகவை சேர்ந்த சில மூத்த நிர்வாகிகளையும், மத்திய அமைச்சர்களையும் ஈடல ராஜேந்தர் சந்தித்து விட்டு வந்தார். இந்நிலையில், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கினார். டிஆர்எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை கூட விட்டு விலகுகிறேன் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, சில நிமிடங்களிலேயே அவரது ராஜினாமாவை சபாநாயகர் போச்சாரம் சஸ்ரீநிவாச ரெட்டி ஏற்பதாக அறிவித்தார். இந்த சூழலில், நாளை பாஜகவில் ஈடல ராஜேந்தர் இணைய உள்ளார். இதனால், இவர் ராஜினாமா செய்த ஹுஜாராபாத் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in