Published : 12 Jun 2021 04:58 PM
Last Updated : 12 Jun 2021 04:58 PM

சர்வதேச யோகா தினம் 21-ம் தேதி கொண்டாட்டம்: முன்னோட்ட நிகழ்ச்சி; நமஸ்தே யோகா பிரத்யேக யோகா செயலி அறிமுகம்

கோப்புப் படம்

புதுடெல்லி

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி ‘யோகாவுடன் இணைந்திருங்கள், வீட்டிலேயே இருங்கள்’ என்ற கருப்பொருளாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழாவது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக வீடுகளில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் முன்னோட்டமாக காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு மத்திய அமைச்சர்களுடன் பிரபல யோகா ஆசான்களும், அனுபவம் வாய்ந்த யோகா நிபுணர்களும் பங்கேற்றனர்.

தனிநபர் மற்றும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக அன்றாட வாழ்க்கையில் அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுமாறு உலக சமூகத்தினருக்குக் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். ‘நமஸ்தே யோகா’ என்ற பிரத்யேக யோகா செல்பேசி செயலியும் இந்த நிகழ்ச்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆயுஷ் அமைச்சகம், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், ‘யோகாவுடன் இணைந்திருங்கள், வீட்டிலேயே இருங்கள்’ என்ற சர்வதேச யோகா தினம் 2021 இன் கருப்பொருளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய ஆயுஷ் இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் வலியுறுத்திப் பேசினார்கள்.

ஆன்மீகத் தலைவர்களும், சர்வதேச புகழ்பெற்ற யோகா ஆசான்களுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், சகோதரி ஷிவானி மற்றும் சுவாமி சிதானந்த் சரஸ்வதி உள்ளிட்டோர் ஆழ்ந்த ஆன்மீக பரிமாணங்கள் முதல் அன்றாட வாழ்க்கை மற்றும் கோவிட் சம்பந்தமான பயன்கள் வரை யோகாவின் பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

கோப்புப் படம்

இதர தலைசிறந்த பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு யோகா வித்திடுவதாகக் கூறினார்.

மத்திய ஆயுஷ் அமைச்சர் கிரண் ரிஜிஜு, சர்வதேச யோகா தினம் 2021-ஐ முன்னிட்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பத்து நாள் தொடர் குறித்துப் பேசினார். தற்போதுள்ள மருத்துவ அவசர காலத்திற்குத் தகுந்த வகையில், யோகாவுடன் இணைந்திருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்பது இந்தத் தொடரின் மையக்கருத்தாக இருக்கும் என்றார் அவர்.

பொதுவான யோகா நெறிமுறைகள் குறித்து ஜூன் 12 முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு பத்து அத்தியாயங்களைக் கொண்ட தொடர், டிடி இந்தியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் இந்தத் தொடரை இயக்குகின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x