இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலி அரசு ரூ.10 கோடி இழப்பீடு வழங்கியது: வழக்கை முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலி அரசு ரூ.10 கோடி இழப்பீடு வழங்கியது: வழக்கை முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
Updated on
1 min read

கடந்த 2012 பிப்ரவரி 15-ம் தேதி கேரளாவின் கொல்லம் துறைமுகம் அருகே விசைப்படகு ஒன்றில் இந்திய மீனவர்கள் 11 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 'என்ரிகா லாக்சி' என்ற இத்தாலிய சரக்கு கப்பல் அவ்வழியாக சென்றது.

அக்கப்பலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் மசிமிலி யானோ லதோர், சல்வடோர் கிரானே ஆகியோர் சந்தேகத்தின் பேரில் விசைப் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அஜிஸ் பிங்க், ஜெலஸ்டின் ஆகிய மீனவர்கள் உயிரிழந்தனர். 9 மீனவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் 2013-ம் ஆண்டு அவர்கள் இத்தாலி திரும்பினர். இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது. இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், இந்திய மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றது குற்றம் என்றும், அதற்கான இழப்பீட்டை இத்தாலி அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும், இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு விசாரணையை இந்தியா நிறுத்த வேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, இத்தாலி வீரர்கள் மீதான வழக்கை முடித்து வைக்க உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ‘‘சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு இத்தாலி அரசு ஏற்கெனவே இழப்பீடாக ரூ.2 கோடி வழங்கப்பட்டு விட்டதால் தலா ரூ.4 கோடியை பெற்றுக் கொள்ள இரு மீனவர்களின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்’’ எனக் கூறப்பட்டிருந்தது. அதை ஏற்று விசாரணையை முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இத்தாலி அரசின் இழப்பீட்டுத் தொகை உச்ச நீதிமன்றத்தில் செலுத்தப் பட்டுள்ளது’’ என்றார். அதை கேரள உயர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். வழக்கை முடித்து வைக்கும் உத்தரவு வரும் 15-ம்தேதி வெளியாகும் என்று உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in