Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

மத்திய அரசு உயிரி ஆயுதம் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய நடிகை ஆயிஷா மீது தேச துரோக வழக்கு

ஆயிஷா சுல்தானா

திருவனந்தபுரம்

மத்திய அரசுக்கு எதிராகப் பேசிய லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும், திரைப்பட இயக்குநருமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

லட்சத்தீவைச் சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. மாடலான இவர் சில படங்களில் நடித் துள்ளார். மேலும் படங்களையும் இயக்கியுள்ளார். மலையாளத் திரைத்துறையின் பல இயக்குநர்களுடன் இணைந்து இவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார்.

அப்போது லட்சத்தீவு பகுதியில் கரோனா வைரஸ் பரவுவதற்கு மத்திய அரசு ‘உயிரியல் ஆயுதங்களை’ (பயோ வெப்பன்) பயன்படுத்தியதாக சுல்தானா குற்றம் சாட்டினார். விவாத நிகழ்ச்சியில் பேசும்போது, "முதலில்லட்சத்தீவில் யாருமே கரோனா வால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இப்போது தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக் கப்படுகின்றனர். இங்கு பயோ வெப்பனை மத்திய அரசு பயன் படுத்தியுள்ளது. மத்திய அரசுதான் இதைச் செய்துள்ளது என்று நான் தெளிவாகக் குறிப்பிடு கிறேன்" என்றார்.

மேலும் தனது கருத்துகள் நியாயமானவை என்றும், அந்த கருத்துகள் சரியானவைதான் என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத் திலும் ஆயிஷா குறிப்பிட்டிருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் லட்சத்தீவில் கரோனா வைரஸ் பரவியது குறித்து சுல்தானா தவறான செய்திகளை பரப்பியதாக பாஜகவின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர், காவரட்டி பகுதி போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சுல்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் 153 பி (வெறுப்பு பேச்சு) பிரிவுகளின் கீழ் சுல்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேசத்துரோக பிரிவின் கீழ் ஆயிஷா மீது வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித் துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x