Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

இயற்கை உரத்தில் விவசாயம் செய்து சாதித்த பேராசிரியர் ராதா மோகன் மறைவு

இயற்கை உரத்தின் மூலம் விவசாயம் செய்து முன்னோடியாக விளங்கிய பேராசிரியர் ராதா மோகன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராதா மோகன். பொருளாதாரப் பிரிவு பேராசிரியரான ராதா மோகன், ஒடிசா அரசு தகவல் துறை ஆணையராகவும் பணியாற்றினார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமா பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த வாரம் உடல்நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு இயற்கை உரம் மூலம் விவசாயத்தில் சாதனை புரிந்ததற்காக ராதா மோகனுக்கும், அவரது மகள் சபர்மதிக்கும் பத்ம விருதை மத்திய அரசு வழங்கியிருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ராதாமோகனும், அவரது மகள் சபர்மதியும் இணைந்து சாம்பவ் என்ற பெயரில் விவசாயிகளுக்காக வேளாண் உதவி மையத்தைத் தொடங்கினர். இங்கு அழிந்து போன பல பயிர்களை இயற்கை உரம் மூலம் விளைவித்து சாதனை படைத்தனர். நயாகர் பகுதியில் நிலம் வாங்கி இயற்கை உரத்தின் மூலம் விவசாயம் செய்து வந்தனர். தற்போது அந்த இடத்தில் 500 வகையான அரிசி வகைகள், 1,000-த்துக்கும் மேலான மர வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.

பிரதமர் இரங்கல்

ராதா மோகனின் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பேராசிரியர் ராதாமோகன் இயற்கை உரங்களைக் கொண்டு செய்யும் விவசாயத்தின் மூலம் வெற்றி கண்டார். அவரது மறைவால் நான் வருத்தம் அடைந்துள் ளேன். அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஒடிசா ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலரும் ராதாமோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x