Published : 30 Dec 2015 09:01 AM
Last Updated : 30 Dec 2015 09:01 AM
சத்தீஸ்கர் மாநிலம், தார்பா பகுதியில் நக்ஸலைட் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் நேற்று சரண் அடைந்தனர்.
பஸ்தார் மாவட்டத்தில் உயரதிகாரிகள் முன்னிலையில் இவர்கள் சரண் அடைந்தனர். மாவோயிஸ்ட் சிந்தாந்தத்தில் ஏமாற்றம் அடைந்தும், மாநில அரசின் சரண்டர் கொள்கையால் ஈர்க்கப்பட்டும் இவர்கள் சரண் அடைந்தததாக பஸ்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.என். டாஷ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “இவர்கள் அனைவரும் நக்ஸலைட் அமைப்பில் கீழ் நிலையில் பணியாற்றியவர்கள். இவர்களில் இருவரின் தலைக்கு தலா ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
சரண் அடைந்தவர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். சத்தீஸ்கர் அரசின் கொள்கையின்படி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்” என்றார்.
அண்டை மாவட்டமான சுக்மா மாவட்டம், சிந்தல்னார் பகுதியில் கடந்த வாரம் 70 நக்ஸலைட்டுகள் சரண் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் நக்ஸலைட் கைது
இதனிடையே சத்தீஸ்கர் மாநிலம், கன்கெர் மாவட்டத்தில் பெண் நக்ஸலைட் ஒருவரை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கொர்ரம் என்ற இந்தப் பெண் பற்றிய தகவலுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சத்தீஸ்கரில் உள்ளாட்சித் தேர்தலின்போது இவர் வன்முறையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தபால்காரர் கொலை
சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம், புல்ப்பர் என்ற கிராமத்தில், சுஜித் பொடியாமி (34) என்ற தபால்காரர் கடந்த வாரம் நக்ஸலைட்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் இவரது உடல், பரியா என்ற கிராமத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் நக்ஸலைட்டுகள் இவரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளதாக தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT