Published : 10 Jun 2021 10:27 PM
Last Updated : 10 Jun 2021 10:27 PM

நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போகிறேன்; மருத்துவர்கள் பூலோகத்தின் இறைதூதர்கள்: பாபா ராம்தேவ்

நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போகிறேன்; மருத்துவர்கள் பூலோகத்தின் இறைதூதர்கள் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியிருக்கிறார்.

முன்னதாக, யோகா, ஆயுர்வேதமும் தனக்கு பலம் சேர்க்கும் என்பதால் நான் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் எனக் கூறிவந்த யோகா குரு பாபா ராம்தேவ் அப்படியே அந்தர்பல்டி அடித்து நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போகிறேன்; மருத்துவர்கள் பூமியில் உள்ள கடவுளின் தூதுவர்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

ஹரித்வாரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவருமே கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொள்ளுங்கள். பின்னர் யோகா, ஆயுர்வேதத்தையும் பின்பற்றுங்கள். கரோனாவுக்கு எதிராக இரட்டை அரணைப் பெறுவீர்கள். அவ்வாறு செய்தால் கரோனாவால் ஒரே ஒரு உயிர்கூட பறிபோகாது.

நானும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளப்போகிறேன். அலோபதி மருத்துவர்கள் பூமியில் உள்ள இறைதூதர்கள். நான் எந்த ஒரு அமைப்பின் மீதும் விரோதம் பாராட்டவில்லை. நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிறவியிலேயே நல்லவர்கள்.

ஆனால், ஒருசில மருத்துவர்கள் தவறும் செய்கின்றனர். அவசர சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சைக்கும் அலோபதி மருத்துவம்தான் சிறந்தது. அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

வரும் 21ம் தேதி முதல் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பது வரலாற்றின் முக்கிய சுவடு" என்று கூறினார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ், ஆங்கில (அலோபதி) மருத்துவம் காரணமாக லட்சக் கணக்கான கரோனா நோயாளிகள் உயிரிழக்கின்றனர் எனக் கூறியிருந்தார்.

மேலும் அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்றும் அவர் பேசுவது போன்ற வீடியோசமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது இந்தகருத்துக்கு அலோபதி மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது கரோனா தடுப்பூசியையும், அலோபதி மருத்துவர்களையும் அவர் வெகுவாக உயர்த்திப் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x