கரோனா தடுப்பு பணியை கவுரவிக்க 40 லட்சம் டெட்டால் பாக்கெட்டில் முன்கள பணியாளர்களின் படம்
இந்தியாவில் மிகவும் நம்பகமான பாக்டீரியா தடுப்பு கிருமிநாசினியாக திகழ்கிறது டெட்டால். இந்நிறுவனத்தின் லோகோ நீண்ட வாள். தற்போது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க பல முன்களப் பணியாளர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் சேவையை கவுரவிக்கும் விதமாக அவர்களதுபுகைப்படத்துடன் பாக்கெட்களை வெளியிடப் போவதாக டெட்டால் நிறுவனம் அறிவித்துள்ளது.
டெட்டால் பாக்கெட்களில் போர்வாள் லோகோவுக்குப் பதிலாக, முன்களப் பணியாளர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் அயராத பணிகள் பற்றிய குறிப்புகளை வெளியிடப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவிட் புரொடெக்டர் - அதாவது கரோனாவிலிருந்து பாதுகாப்பவர்கள் என்ற வாசகத்துடன் சானிடைஸர்களை வெளியிட உள்ளது. ஜூன் 3-வது வாரத்திலிருந்து இது விற்பனைக்கு வரும். மொத்தம் 40 லட்சம் பாக்கெட்களை வெளியிடப் போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கென www.dettolsalutes.com என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்கள் மட்டுமின்றி 5 லட்சம் விற்பனையகங்கள் மூலம் இதை விற்பனை செய்யப் போவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கோவிட் பணியாளர்களின் பணிகளுக்கு தலை வணங்குவதாகவும் இதற்காக டெட்டால் சல்யூட் என்ற பிரச்சாரத்தைத் தொடங்குவதாகவும் ரெக்கிட் நிறுவனத்தின் தெற்காசிய சந்தைப் பிரிவு இயக்குநர் திலென் காந்தி தெரிவித்துள்ளார்.
நிறுவன வரலாற்றிலேயே முதல் முறையாக நிறுவனத்தின் லோகோவுக்குப் பதிலாக கரோனா பாதுகாவலர்களின் புகைப்படம், அவர்களைப் பற்றிய விவரமும் வெளியிடப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
