Published : 16 Dec 2015 03:21 PM
Last Updated : 16 Dec 2015 03:21 PM
கூகுள் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் 100 ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டில் இணைய சேவை வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் நிறுவனத்தின் குழு இந்தியா வந்துள்ளனர்
டெல்லியில் இன்று செய்தியாளர்கள், தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடல் நடந்தது. அப்போது பேசிய சுந்தர் பிச்சை, "அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் 100 ரயில் நிலையங்களுக்கு வைஃபை வசதி வர உள்ளது.
முதற்கட்டமாக மத்திய மும்பை ரயில் நிலையத்துக்கு இந்த சேவை ஜனவரி மாதமே அறிமுகம் செய்யப்படும். ரயில்டெல் உடன் இதற்காக கூட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக 400 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை அளிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஹைதராபாத்தில் கூகுளின் புதிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. பெங்களூருவில் உள்ள அலுவலகத்திலும் ஹைதராபாத்தில் அமையப் போகும் அலுவலகத்திலும் இந்திய பொறியாளர்களை வேலைக்கு அமர்த்த ஆர்வமாக உள்ளோம்.
நாட்டில் உள்ள 3 லட்சம் கிராமங்களை தேர்வு செய்து இணைய சேவை சென்றடைய வேண்டி அனைத்து நடவடிக்கைகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது " என்றார் சுந்தர் பிச்சை.
கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்ற பின் முதன் முறையாக சுந்தர் பிச்சை இந்தியா வந்துள்ளார். தனது இரண்டு நாள் பயணத்தில் அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். பின்னர் டெல்லி பல்கலைக்கழக கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT