Published : 08 Jun 2021 10:33 AM
Last Updated : 08 Jun 2021 10:33 AM

எங்கள் பேச்சை கேட்க பிரதமர் மோடிக்கு 4 மாதங்கள் ஆகிறது: மம்தா பானர்ஜி விமர்சனம்

புதுடெல்லி

அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என 4 மாதங்களாக கோரி வருகிறேன், மிகுந்த அழுத்தம் வந்த பிறகு மாநில அரசின் பேச்சை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டுள்ளார் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் அதேசமயம் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

கரோனா நமது மிகப்பெரிய எதிரி. அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.

தடுப்பூசியை பொறுத்தவரையில் சில இடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. இது விரைவில் சரி செய்யப்படும். தடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும் செய்கிறோம் என சில மாநில அரசுகள் வலியுறுத்தின. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன.

தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது மத்திய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன.

இதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும். ஜூன் 21-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு இது அமலில் இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மம்தா பானர்ஜி சாடல்

தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பிப்ரவரி மாதம் முதல் பல முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் 4 மாதங்களாக செய்யப்படவில்லை.

மிகுந்த அழுத்தம் வந்த பிறகு மாநில அரசின் பேச்சை கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அமல்படுத்த பிரதமர் மோடி 4 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார்.

கரோனா தொற்று பரவியது முதலே மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கெனவே பலரது உயிரை வாங்கிவிட்டது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x