Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM

மத்திய பிரதேச மாநிலத்தில் 2,500 போன்சாய் மரங்களால் வீட்டு மொட்டை மாடியை சிறிய வனமாக மாற்றிய முதியவர்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோஹன் லால் துவிவேதி (64). இவர் அம்மாநில மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீட்டு மொட்டை மாடியில் போன்சாய் ரக மரங்களை வளர்த்து வருகிறார்.

முதலில் 20, 30 என்ற எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கத் தொடங்கிய துவிவேதி, தற்போது 40-க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த 2,500 போன்சாய் மரங்களை பராமரித்து வருகிறார். நாள் முழுவதும் பறவைகளின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமுமாய் பச்சை பசேலன, ரம்மியமாக சிறிய வனம் போல காட்சியளிக்கிறது துவிவேதியின் மொட்டை மாடி.

இதுகுறித்து துவிவேதி கூறிய தாவது:

மரங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை சிறு வயது முதலே இருந்தது. ஆனால், அதற்கு எங்கள்வீடு வசதிப்படாததால் ஓரிரு செடிகளை மட்டுமே வளர்த்து வந்தேன். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டுமாடியில் 250 போன்சாய் மரங்களைவளர்த்து வருவதாக செய்தித்தாளில் படித்தேன். அப்பொழுதுதான், மாடியிலும் மரங்களை வளர்க்க முடியும் என்பது எனக்கு தெரிந்தது.

அன்றில் இருந்து எனது வீட்டு மொட்டை மாடியில் போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறேன். முதலில் அலுவலகத்துக்கு சென்றதால், மரங்களை பராமரிப்பதற்கு சிறிது நேரமே கிடைக்கும். ஆனால், இப்போது ஓய்வுபெற்று விட்டதால் தோட்டத்தில்தான் பாதி நேரத்தை செலவிட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

துவிவேதியின் மாடித் தோட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் துவிவேதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x