Published : 06 Jun 2021 04:47 PM
Last Updated : 06 Jun 2021 04:47 PM

பள்ளிக்கல்வி செயல்திறன் குறியீடு: ஏ++ மதிப்பீடு பெற்று தமிழகம் சாதனை

புதுடெல்லி 

பள்ளிக்கல்வி செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ஐ‌ பெற்றுள்ளன.

நாடுமுழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை 70 பிரிவுகளின் கீழ் அளவிடுவதற்காக செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை அரசு அறிமுகப்படுத்தியது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீடு 2019-20-ன் வெளியீட்டிற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அனுமதி அளித்துள்ளார்.

ரமேஷ் பொக்ரியால்

முதன்முறையாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீடு, இந்த வரிசையில் மூன்றாவதாகும். இந்தக் குறியீடு, கல்வித்துறையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பல்முனை முயற்சிகளின் வாயிலாக மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மேற்கொள்ள உந்துசக்தியாக இருக்கும்.

பள்ளிக் கல்வி முறை அனைத்து நிலைகளிலும் வலுவாக இருப்பதை உறுதி செய்வதற்கும், ஏதேனும் இடைவெளி தென்பட்டால் அதனைச் சுட்டிக்காட்டவும் இந்த குறியீடு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.

2019-20 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ஐ‌ பெற்றுள்ளன.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2019-20 ஆண்டில் பெரும்பாலான மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களது தர நிலையில் மேம்பட்டுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ஆகியவை தங்களது ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பெண்ணில் கூடுதலாக 10%, அதாவது 100 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளன.

அணுகுதல் என்ற பிரிவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள் மற்றும் பஞ்சாப் ஆகியவை 10% (8 புள்ளிகள்) வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் என்ற பிரிவில் சுமார் 13 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 10% (15 புள்ளிகள்) வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் ஒடிசா, 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

சம விகிதம் என்ற பிரிவில் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் 10%க்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளன.

ஆளுகை செயல்முறை என்ற பிரிவில் 19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10% வளர்ச்சியை (36 புள்ளிகள்) எட்டியுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் குறைந்தபட்சம் 20 சதவீத வளர்ச்சியைப் (72 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகள்) பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x