Published : 06 Jun 2021 04:22 PM
Last Updated : 06 Jun 2021 04:22 PM

நிவாரணப் பொருட்களை திருடியதாக புகார்: சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு

மேற்குவங்க மாநிலத்தில் நிவாரணப் பொருட்களை திருடியதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி மீது அம்மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வர் மம்தாவை, சுவேந்து அதிகாரி சுமார் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
எனினும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மம்தா மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.

திரிணமூல் காங்கிஸ் சார்பில் எம்.பி.க்களாக இருந்த சுவேந்துவின் தந்தை சிசிர் குமார் அதிகாரி, தம்பி திப்யேந்து அதிகாரி ஆகிய இருவரும் திரிணமூல் கட்சியுடன் உறவை துண்டித்துக் கொண்டனர்.

இதில் சிசிர் குமார் அதிகாரி மட்டும் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வன்முறை ஏற்பட்டது. இதில் பாஜகவினர் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

அண்மையில் புயல் சேதங்களை பார்வையிட மேற்கு வங்கம் வந்த பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரியையும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்ததால், கோபமடைந்த மம்தா பிரதமரை கூட்டத்தை புறக்கணித்தார்.

இந்நிலையில் கிழக்கு மிதின்பூர் மாவட்டத்தில் உள்ள கந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீதும் அவருடைய சகோதரரும் முன்னாள் கந்தி நகராட்சி தலைவருமான சவுமேந்து அதிகாரி மீதும், அதே மாநகராட்சியின் உறுப்பினரான ரத்னதீப் மன்னா என்பவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். தற்போது போலீஸார் இப்புகாரை ஏற்று சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x