Last Updated : 06 Jun, 2021 11:21 AM

 

Published : 06 Jun 2021 11:21 AM
Last Updated : 06 Jun 2021 11:21 AM

மதுராவில் பசுக்களை கடத்தியதாக ஒருவர் சுட்டுக்கொலை:  5 பேரை காப்பாற்றிய போலீஸார்

உத்தரப்பிரதேசம் மதுராவில் இறைச்சிக்காகப் பசுக்களை கடத்தியதாக ஷேர் கான் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் சிக்கிய மேலும் ஐந்து இளைஞர்களை பொதுமக்களிடம் இருந்து காத்து போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம், தெய்வீக நகரமான மதுராவின் கோசி கலன் காவல்நிலையப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றுள்ளது. இங்குள்ள துமோலா கிராமத்திலிருந்து ஆறு பசுக்களை வாகனத்தில் ஏற்றி ஆறு பேர் ஹரியாணாவிற்கு கடந்த முயற்சித்ததாகத் தெரிகிறது.

இதை அப்பகுதியில் கோசாலை நடத்தும் சந்திரசேகர் பாபா அவர்களது வாகனத்தை சாலையில் மறித்து இறக்கியுள்ளார். அதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்த பொதுமக்களால் அந்த இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இதில், பொதுமக்கள் கும்பலிலிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் ஆறு பேரில் மூத்தவரான ஷேர் கான் கொல்லப்பட்டுள்ளார். மற்ற ஐந்து பேரும் பொதுமக்களால் தாக்கப்பட்டனர்.

இச்சூழலில் அங்கு வந்த கோசி கலன் போலீஸார் ஐந்து பேரையும் காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அருகிலுள்ள புலந்ஷெஹரை சேர்ந்த இவர்கள் அனைவரும் பசுக்களை கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மதுராவின் ஊரகப் பகுதியின் எஸ்பியான ஷிரீஷ் சந்த் கூறும்போது, ‘‘ஹரியாணாவின் மேவாத்திற்கு பசுக்களை கடத்த முயன்றதால் கோபம் அடைந்து தாக்குதல் நடத்திய பொதுமக்கள் மீது ஷேர் கான் கள்ளத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

இதில் பதிலுக்கு பொதுமக்களில் அடையாளம் தெரியாத ஒருவர் சுட்டதில் ஷேர் கான் அதே இடத்தில் பலியாகி விட்டார்’’ எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் ஷேர் கான், அவரது சகாக்களான அணீஸ், ரஹமான், ஷெஹசாத், காதீம் மற்றும் ஷேர் கானின் மகனான ஷாரூக் ஆகியோர் மீது சந்திர காந்த் பாபா புகார் அளித்துள்ளார்.

இந்த ஆறு பேர் மீது பசு வதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான ஷாரூக், தன் தந்தை ஷேர் கானை கொலை செய்து விட்டதாக மூன்று பேர் மீது புகார் அளித்து வழக்குகள் பதிவாகி உள்ளது.

பசுப் பாதுகாவலர்கள் கைது

இதனிடையே, கடந்த மே 16 இல் உ.பி.யின் முராதாபாத்தில் உள்ள கவுட் கிராமத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்வதாக ஷாகீர் குரைஷி என்பவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது பசுப் பாதுகாவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தினர்.

இக்கும்பல், அவரிடம் ரூ.50,000 கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பிறகு ஷாகீர் குரைஷியை போலீஸில் ஒப்படைத்து தலைமறைவாகினர். ஷாகீரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் அக்கும்பலின் நான்கு பேர் தேடிப் பிடித்து கைது செய்யப்பட்டனர்.

இவர்களது தலைவனான மனோஜ் தாக்கூர் என்பவரை நேற்று முன்தினம் முராதாபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x