Published : 05 Jun 2021 04:08 PM
Last Updated : 05 Jun 2021 04:08 PM

விளைவுகளை சந்திக்க நேரிடும்; ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதிக் கெடு

புதிய ஐடி விதிகளை பின்பற்ற வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதிக் கெடு விதித்துள்ளது. விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் ‘‘சமூக ஊடக நிறுவனங்கள் அதன்அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர்தல்’’ போன்ற விதிமுறைகள் உள்ளன.

இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனம் அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இந்த நிலையில், புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியுள்ளது. இதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

புதிய விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் உரிய அதிகாரியின் விவரங்கள் குறித்து ட்விட்டர் இன்னும் தெரிவிக்கவில்லை.

ட்விட்டர் பரிந்துரைத்துள்ள குறை தீர்க்கும் அதிகாரி இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர் அல்ல. ட்விட்டர் குறிப்பிட்டுள்ளபடி ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலக முகவரி, உண்மையில் இந்தியாவில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தின் முகவரி. இது விதிகளுக்கு புறம்பானது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ் ட்விட்டர் நிறுவனத்திற்கு விலக்கு அளிக்கப்படாது. விளைவுகளை சந்திக்க நேரிடும்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x