மக்களவை தொகுதிதோறும் கே.வி. பள்ளி தொடங்க முயற்சி

மக்களவை தொகுதிதோறும் கே.வி. பள்ளி தொடங்க முயற்சி
Updated on
1 min read

குறைந்தபட்சம் ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு கே.வி. பள்ளி என்ற வீதத்தில் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், "தங்கள் தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க ஏராளமான எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து மக்களவை தொகுதிகளிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, போதிய நிதி ஒதுக்கீடு பெறும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டில் பெறப்படும் கூடுதல் நிதி மூலம் அதிக பகுதிகளில் கே.வி. பள்ளிகள் தொடங்கப்படும். குறைந்தபட்சம் ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு கே.வி. பள்ளி என்ற வீதத்தில் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

வெளிநாட்டு மாணவர் அதிகரிப்பு

மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, "இந்தியாவுக்கு கல்வி பயில்வதற்காக வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் மலேசியா முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளிலிருந்து அதிக மாணவர்கள் வந்துள்ளனர்.

2012-ம் ஆண்டு 76 ஆயிரத்து 753 வெளிநாட்டு மாணவர்களும், 2013-ம் ஆண்டு 93 ஆயிரத்து 693 மாணவர்களும் இந்தியாவுக்கு பயில வந்துள்ளனர். 2014-ல் இந்த எண்ணிக்கை 44 ஆயிர்து 260 ஆக குறைந்தது.

நடப்பாண்டில் 66 ஆயிரத்து 885 பேர் வந்துள்ளனர். இதில், மலேசியாவில் இருந்து 6,471 பேரும், ஆப்கானிஸ்தானில் இருந்து 5, 605 பேரும், வங்கதேசத்தில் இருந்து 5,431 பேரும் வந்துள்ளனர்.

சூடான், யேமன், தாய்லாந்து, இலங்கை, ஈரான், இராக், நைஜீரியா, கொரியாவிலிருந்து தலா 2,000-க்கும் அதிகமான மாணவர்கள் இந்தியா வந்துள்ளனர்" என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in