Last Updated : 04 Jun, 2021 10:56 AM

 

Published : 04 Jun 2021 10:56 AM
Last Updated : 04 Jun 2021 10:56 AM

அலிகரில் மீண்டும் கள்ளச்சாராயத்திற்கு 9 பேர் சாவு: இதுவரை 97 பேர் பலி

புதுடெல்லி

உத்தரப்பிரதேசம் அலிகரில் மீண்டும் கள்ளச்சாராயத்திற்கு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதே காரணத்திற்காக இதுவரையும் அம்மாவட்டத்தில் 97 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவம், அலிகரின் ஜவான் காவல்நிலையப் பகுதியிலுள்ள ரோஹேரா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத சிலர் கள்ளச்சாராயம் நிறைந்த பெருமளவு புட்டிகளை கொட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

இவற்றின் புட்டிகளை அருகில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் எடுத்து அருந்தியுள்ளனர். பிஹாரின் கயா, ஜெஹனாபாத்தை சேர்ந்த இவர்கள் அங்குள்ள செங்கல் சூளைகளில் பணி செய்பவர்கள்.

நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தில், கணவன், மனைவி உள்ளிட்ட ஒன்பது பேர் பலியாகி விட்டனர். மேலும் 22 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ரொஹேரா செங்கல் சூளையின் காண்ட்ராக்டர் சுரேஷ் யாதவ் கூறும்போது, ‘‘சம்பவம் நடந்த அன்று மாலை சில இளைஞர்கள் அந்த கால்வாயில் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர்.

அப்போது கால்வாயில் மூன்று அட்டை பெட்டிகள் நிறைய மதுப்புட்டிகள் இருந்ததை கண்டுள்ளனர். இந்த தகவல் பலரும் அறிந்து அவற்றை 9.00 மணிக்கு அருந்தியவர்கள் அடுத்த இரண்டு மணி நேரங்களில் சுருண்டு விழுத் துவங்கினர்.’’ எனத் தெரிவித்தார்.

தகவலறிந்து அலிகர் மாவட்ட எஸ்.எஸ்.பியான கலாநிதி நைய்தானி தலைமையில் அங்கு காவல் படை வந்திருந்தது. விசாரணைக்கு பின் கால்வாயிலிருந்து அட்டை பெட்டிகளை சீல் வைத்து கொண்டு சென்றனர்.

எனினும், அரசு தரப்பில் இன்னும் அதிகாரபூர்வமாகப் பலியானவர்கள் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. அலிகர் மாவட்டத்தில் சமீப நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை ரகசியமாக நடைபெற்றுள்ளது தெரிந்தது.

இந்த விவகாரம் கடந்த மே 29-ல் முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்தது. அலிகரில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் சிலர் அதன் கோண்டா, லோதா பகுதியில் விற்பனை செய்துள்ளனர்.

இந்த கள்ளச்சாராயத்தை காலியான மதுப்புட்டிகள் மற்றும் பாலீத்தீன் பைகளில் நிரப்பி விற்றுள்ளனர். குறைந்து விலைக்கு விற்கப்பட்ட இவற்றை ஏமாந்து அருந்தியதில் அப்பகுதிவாசிகள் 88 பேர் பலியாகி விட்டனர்.

இன்னும் கூட அவர்களில் 29 பேர் அலிகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகிலுள்ள நொய்டாவின் தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

இந்த சம்பவத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையின் உயர் அதிகாரிகள் ஏழு பேர் மாற்றல் செய்யப்பட்டனர். அப்பகுதியின் காவல்துறை நிலையத்திலும் மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்து விசாரணைக்கு உள்ளாகி வருகின்றனர்.

முக்கியக் குற்றவாளிகள் கைது

இந்த வழக்கில் ரிஷி, முனிஷ், அணில் சவுத்ரி, ஷிவ்குமார், நீரஜ் சவுத்ரி, விபின் யாதவ் மற்றும் சூரஜ் சவுத்ரி ஆகிய ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர் வைதானதுடன் சில முக்கியக் குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x