Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

மருமகளை கட்டிப்பிடித்து கரோனாவை பரப்பிய மாமியார்: தெலங்கானா போலீஸார் விசாரணை

பிரதிநிதித்துவப் படம்

ஹைதராபாத்

தனக்கு கரோனா தொற்று வந்ததால், மருமகளும் அந்த வேதனையை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில், தெலங்கானாவைச் சேர்ந்த மாமியார், அடிக்கடி மருமகளை கட்டிப்பிடித்து வைரஸ் தொற்றை பரப்பி இருக்கிறார்.

தெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம், நெமலிகுட்டா பகுதியைச் சேர்ந்தபெண் ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது கணவர் ஒடிசா மாநிலத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 வயது குழந்தை உள்ளது.

இதனிடையே, மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தொலைபேசி மூலம் தனது கணவரிடம் அப்பெண் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் அவரது மாமியாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திக்கொண்டார். ஆனால், கரோனா தொற்று தனது மருமகளுக்கும் வர வேண்டும் என நினைத்த மாமியார், திடீரென தனது மருமகள் மீது பாசத்தை பொழிய ஆரம்பித்தார். தனக்கு சமையல் செய்து கொடுக்கும் மருமகளை அடிக்கடி கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். மேலும், தனது பேரனையும் கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடி உள்ளார்.

இதனால், மருமகளுக்கும் சில நாட்களில் கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. அவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொண்டதில், அவருக்கு தொற்றுஇருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கரோனா தொற்று வந்த மருமகளை, மாமியார் வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதனால் செய்வதறியாது இருந்த அவர், தனது அண்ணன் வீட்டிற்கு சென்று நடந்த விவரங்களை கூறி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதுகுறித்து சிரிசில்லா போலீஸாரிடம் புகார் அளித்தனர் அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x