Last Updated : 03 Jun, 2021 09:24 AM

 

Published : 03 Jun 2021 09:24 AM
Last Updated : 03 Jun 2021 09:24 AM

‘வீடு விற்பனைக்கு’ - அலிகர் கிராம தலித் வீட்டு வாசல்களில் எழுதிய வாசகங்களால் சர்ச்சை

புதுடெல்லி

‘வீடு விற்பனைக்கு’ என அலிகர் கிராமத்தின் அனைத்து தலித்துகளும் தம் வீட்டு வாசலில் எழுதிய வாசகங்களால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதன் பின்னணியில் தலித்களது கல்யாண ஊர்வலங்களுக்கு முஸ்லிம்கள் தடையாக இருந்ததாகத் தெரிந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் அலிகருக்கு அருகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமம் நூர்பூர். தப்பல் தாலுகாவில் அமைந்துள்ள இங்கு சுமார் 1000 தலித்துகள் வாழ்கின்றனர். இவர்களது திருமண ஊர்வலங்கள் முஸ்லிம்களின் முக்கியத் தெருக்களில் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

இந்தவகையில், இருவருடனும் நிலவிய சமூக ஒற்றுமை குறிப்பிட்ட சில காரணங்களால் குலைந்து வருவதாகக் கருதப்படுகிறது. வழக்கமாக இரவுகளில் நடைபெறும் தலித் குடும்பத்து திருமண ஊர்வலங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக பகலிலும் நடைபெறத் துவங்கின.

மசூதிகளின் தெருக்களையும் கடக்கும் இந்த ஊர்வலங்களில், பாட்டுக்கச்சேரியுடன் மேளதாளங்களும் ஒலிப்பது உண்டு. இதை சமீப காலமாக சில முஸ்லிம்கள் எதிர்க்கத் தொடங்கி உள்ளனர்.

இது இருசமுதாயங்களுக்கு இடையே பிளவை உருவாக்கும் சூழல் எழுந்துள்ளது. இதன் உச்சமாக கடந்த மே 25 மாலை நூர்பூர் கிராமத்தில் நடைபெற்ற மண ஊர்வலத்தின் சம்பவம் இருந்துள்ளது.

நூர்பூர்வாசி ஓம் பிரகாஷ் என்பவரின் மகள் திருமணத்திற்காக மணமகன் ஊர்வலமாக கிராமத்தில் நுழைந்துள்ளார். இதில் முஸ்லிம்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலானது.

இதன் மறுநாள் கூடிப்பேசிய தலித் பஞ்சாயத்தினர், தம் வீடுகளை விற்று கிராமத்தை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர். இதையடுத்து கிராமத்தின் தலித் குடும்பத்து வீடுகளின் கதவுகள் அல்லது சுவர்களில் ‘தங்கள் வீடு விற்பனைக்கு’ என்ற அறிவிப்பை எழுதி வைத்தனர்.

இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் நூர்பூர் கிராமவாசியான ஓம் பிரகாஷ் கூறும்போது, ‘‘எங்கள் சமுதாயத் திருமணங்களின் ஊர்வலங்களை இங்குள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து தடுப்பதுடன் தாக்குதலை நடத்துகின்றனர்.

இதனால், எங்கள் பெண்களின் திருமணத்தை இங்கு நடத்த முடியாமல் உள்ளது. போலீஸில் புகார் செய்தும் பலனில்லை என்பதால், தம் வீடுகளை விற்று வெளியேற சமூகத்தினர் முடிவு எடுத்து விட்டனர்’’ எனத் தெரிவித்தார்.

கிராமத்தினர் எழுதி வைத்த அறிவிப்பால் நூர்பூரின் செய்தி உ.பி. அரசியலில் பங்கெடுக்கத் துவங்கி உள்ளது. இங்கு அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பிரச்சனை சூடு பிடித்துள்ளது.

அலிகரின் பாஜக எம்.பியான சதீஷ் கவுதமும், அப்பகுதியின் எம்எல்ஏவான அனுப் வால்மீகி கிராமத்திற்கு வந்து தலித் குடும்பத்தினரை சந்தித்தனர். இனி தாம் பாதுகாப்பு அளிப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, முதன்முறையாக தலையிட்ட நூர்பூர் பகுதி காவல் நிலையத்தார் இரண்டு தரப்பிலும் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளின் பிரிவில் 11 பெயர் தெரியாத முஸ்லிம்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளது.

முகக்கவசம், சமூகவிலகல் இன்றி, கரோனா பாதுகாப்பை மீறியதாக 7 தலீத் சமுதாயத்தினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்விரண்டு வழக்குகளிலும் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x