Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM
இந்தியாவில் பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) வர்த்தகம் தடை செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக 2018-ம் ஆண்டுவங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை நீக்கி உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தை வங்கிகள் மூலமாக மேற்கொள்ளவும் வழியேற்பட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நிதி பரிவர்த்தனைக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதனால் பிற வங்கிகளில் அதுவரை மேற்கொள்ளப்பட்ட கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே கிரிப்டோ வர்த்தகத்துக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியே கிரிப்டோ கரன்சியை உருவாக்குவது குறித்தும் பரிசீலித்தது. கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு நெருக்குதலால் இப்போது தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் ரிசர்வ் வங்கி எவ்வித தெளிவான அறிவிக்கையையும் வெளியிடாத சூழலில் வங்கிகள் இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்குத் தயக்கம் காட்டின.
இந்நிலையில், கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்ட பிறகு 2018-ல்ஆர்பிஐ வெளியிட்ட உத்தரவு அர்த்தமற்றதாகி விடுகிறது என்றும் ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது 100 சதவீதம் சட்டப்பூர்வமானதாகிறது. அதேசமயம் இந்த வர்த்தகம் நேர்மையான பணிகளுக்கானதாக இருக்கும்பட்சத்தில் அதற்குரிய சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும் என ஜெப்பே நிறுனத்தின் இணை செயல் அதிகாரி அவினாஷ் சேகர் குறிப்பிட்டுள்ளார். இவரது நிறுவனம் இந்தியாவில் செயல்படும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மையங்களில் மிகவும் பழமையானதாகும். ரிசர்வ் வங்கியின் அறிவிக்கையைத் தொடர்ந்து மேலும் பலர் இத்தகைய வர்த்தகத்தில் ஈடுபடுவர் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்நியச் செலாவணி மோசடி, தீவிரவாதத்துக்கு நிதி, கருப்புப் பணம் போன்ற முறைகேடான பணிகளுக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகம் காரணமாகிவிடும் என ஆர்பிஐ கருதுகிறது. ஆனால் இத்தகைய வர்த்தகத்துக்கு அனுமதி அளிப்பதன் மூலம் மேலும் பாதுகாப்பான அதேசமயம் முறையான வர்த்தகம் நடைபெற வழியேற்படும் என காயின்டிசிஎக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுமித் குப்தா தெரிவித்தார்.
நீடிக்கும் குழப்பம்
ரிசர்வ் வங்கி தனது 2018-ம் ஆண்டு உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டதால் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு அங்கீகாரம் அளித்துவிட்டதாக அர்த்தம்கிடையாது என ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர். கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பாக எத்தகைய நம்பகத்தன்மை மற்றும் அதற்கான சட்ட ரீதியான பாதுகாப்பு, இத்தகைய வர்த்தகத்தில் ரிசர்வ் வங்கிக்குள்ள பொறுப்புஆகியன எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆர்பிஐ தனது உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். இதனாலேயே உத்தரவை திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT