Published : 02 Jun 2021 05:31 PM
Last Updated : 02 Jun 2021 05:31 PM

புதிய ஐ.டி. சட்டம் எங்களுக்கு பொருந்தாது; விலக்கு அளிக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூகுள் முறையீடு

புதுடெல்லி

நாங்கள் தேடு பொறி நிறுவனம்தான், சமூக வலைதளம் அல்ல, ஆகையால் புதிதாக அமல்படுத்தப்பட்ட ஐ.டி. விதிகள் எங்களுக்கு பொருந்தாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் ‘‘சமூக ஊடக நிறுவனங்கள் அதன்அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும். புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர்தல்’’ போன்ற விதிமுறைகள் உள்ளன.

இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனம் அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதின்றம் ட்விட்டர் நிறுவனம் புதிய ஐடி சட்டங்களை ட்விட்டர் நிறுவனம் ஏற்க வேண்டும் என தெரிவித்தது.

இந்தநிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பெண்ணின் ஆபாச புகைப்படத்தை நீக்க உத்தரவிட்ட வழக்கு ஒன்றின் விசாரணை நடைபெற்றது. பெண் ஒருவரின் ஆபாச புகைப்படங்கள் ஆபாச வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், புகைப்படங்கள் இணையத்தில் இருந்து நீக்கமுடியாத சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு, டெல்லி அரசு, இணைய சேவை வழங்குநர் ஆணையம், பேஸ்புக் உள்ளிட்டவைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி ஜோதி சிங் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறுகையில் “ நாங்கள் தேடு பொறி நிறுவனம்தான் சமூக வலைதளம் அல்ல. ஆகையால் புதிதாக அமல்படுத்தப்பட்ட ஐ.டி. விதிகளில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இந்த வழக்கில் படத்தை நீக்ககோருவது தொடர்பாவ உத்தரவு சமூகவலை தளங்களுக்கு மட்டுமே பொருந்தும். கூகுள் தேடுபொறி மட்டும் என்பதால் இதனை நீக்கும் அதிகாரம் இல்லை. அதனை செய்யவும் முடியாது ’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x