Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

ரூ.86 ஆயிரம் கோடியில் காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம்- கைகொடுக்கும் ஆந்திரா.. முட்டுக்கட்டை போடும் கர்நாடகா..

தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாகப் போகிறது. ஆம், கோதாவரி நதியை காவிரியுடன் இணைக்கும் திட்டத்துக்கு தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு (என்டபிள்யுடிஏ) ஒப்புதல் வழங்கி, இதற்கான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பிஉள்ளது. சுரங்கப்பாதையுடன் மொத்தம் 1,211 கி.மீ தூரம் வரை கால்வாய் தோண்டி இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 2020-21 வருவாய் ஆண்டின்படி ரூ.85,962 கோடிசெலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தமிழகத்துக்கு உதவ ஆந்திர மாநிலம் முன்வந்துள்ள நிலையில், தெலங்கானாவும் கர்நாடகாவும் முட்டுக்கட்டை போடுகின்றன.

கரோனா தொற்றால் நாட்டு மக்கள் அனைவரும் கதி கலங்கி உள்ள நிலையில், தமிழக மக்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாக கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் குடிநீர் தேவை பூர்த்தியாவதுடன் வேளாண்மை மற்றும் தொழில் துறைகள் வளர்ச்சி அடைய உள்ளன.

கோதாவரி நதியை காவிரி நதியுடன் இணைக்கும் திட்டத்துக்கு தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதற்கட்ட திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயார் செய்து சம்பந்தப்பட்ட சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு கடந்த திங்கட்கிழமை அனுப்பி வைத்தது. இதன்படி, தெலங்கானா மாநிலம், ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டம், மஹதேவபுரம் மண்டலத்தில் உள்ள இச்சம்பள்ளியில் உள்ள கோதாவரி நதி மீது அனைக்கட்டு கட்டி, தமிழகத்தின் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள கல்லணை வரை உள்ள மொத்தம் 1,211 கி.மீ தூரம் வரை இந்த நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 19 கி.மீ தூரம் சுரங்க மார்கமும் அடங்கும். வழியில் 1,088 சைபர் கால்வாய்கள் கட்டப்பட உள்ளன. இச்சம்பள்ளியிலிருந்து தெலங்கானா மாநிலம், நாகார்ஜுன சாகர் அணைக்கட்டு வரை நதிநீரை திசை திருப்ப 3 இடங்களில் லிஃப்ட் முறை நிர்மானிக்கப்பட உள்ளது. இதைக் கட்ட 3,845 மில்லியன் யூனிட் மின்சாரம் அவசியம். மின்சார செலவு ரூ.769 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 366 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யக்கூடிய நீர் மின் உற்பத்தி மையங்கள் கட்டப்படுகின்றன.

இச்சம்பள்ளி அருகே கட்டப்படும் அணைக்கட்டால், அப்பகுதியில் உள்ள 9,306 ஹெக்டேர் நிலம் தாழ்வான பகுதியாக மாற்றப்படும். இதனால், தண்ணீர் சூழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இடம் கூட நதிக்கு சொந்தமானது என்றும், இவை சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பள்ளி சுற்றுப்புறத்தில் உள்ள 9 கிராமங்களும், 5,475 குடும்பங்களைச் சேர்ந்த 21,575 பேர் தங்களது வீடு, நிலங்களை இழக்கும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் இச்சம்பள்ளி பகுதியில் கோதாவரி நதியின் குறுக்கே 87 மீட்டர் நீளத்துக்கு அணைக்கட்டு கட்டப்படும். இதன் கொள்ளளவு 15.89 டிஎம்சி ஆகும். இந்த அணைக்கட்டிலிருந்து தினமும் 2.2 டிஎம்சி தண்ணீர் நாகார்ஜுன சாகர் அணைக்கு அனுப்பப்படும். இடையில், கொட்டிமுக்கல கிளை கால்வாயின் கீழ் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடு, சண்டூரு ஆகிய பகுதிகளில் பாசனத்துக்காக தண்ணீர் வழங்கப்படும். 2-ம் கட்டத்தில், ஸ்ரீசைலம் இடது கால்வாய் பகுதியில் 1.09 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.

ஆந்திராவில் உள்ள நாகார்ஜுன சாகர் அணைக்கட்டின் வலது கால்வாயின் கீழ் 1.26 லட்சம் ஹெக்டேர்களுக்கும், நாகார்ஜுன சாகர்-சோமசீலாவின் கீழ் உள்ள நிலங்களில் 1.68 லட்சம் ஹெக்டேர்களுக்கும் புதிய பாசன வசதி கிடைக்க வழி வகுக்கும். சோமசீலா-காவிரி இடையே 2.05 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலங்களுக்கு புதிதாக பாசன வசதி கிடைக்கும். மேலும், காவிரி டெல்டாவின் கீழ் 78,250 ஹெக்டேர் நிலங்களுக்கு புதிதாக பாசன வசதி கிடைக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழகத்துக்கு குடிநீர், விவசாயத்துக்கு தேவையான நீர் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சியின் தேவைக்கு கூடுதலாக நீர் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்காக சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x