Last Updated : 02 Jun, 2021 03:12 AM

 

Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கும் நன்கொடைக்கு மத்திய அரசின் வரி விலக்கு

அயோத்தியின் தனிப்பூர் கிராமத்தில் கட்டப்படும் மசூதிக்கான நன்கொடைக்கு மத்திய அரசின் வரி விலக்கு கிடைத்துள்ளது. இதனை மசூதியை கட்டி வரும் அறக்கட்டளையான, இந்தோ இஸ்லாமிக் கல்சுரல் பவுன்டேஷன் (ஐஐசிஎப்) தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி - ராம ஜென்மபூமி நிலத்தகராறு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசால் இந்த நிலம், உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வக்ஃபு வாரியத்துக்கு அளிக்கப்பட்டது. இதன் சார்பில் ஐஐசிஎப் எனும் அறக்கட்டளை அமைத்து மசூதி கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி ராமர் கோயிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள தனிப்பூர் கிராமத்தில் நடந்து வருகிறது. இப்பணிக்காக நாடு முழுவதிலும் ஐஐசிஎப் நன்கொடை பெறத் தொடங்கியுள்ளது. இந்த நன்கொடை அளிப்பவர்களுக்கு மத்திய அரசின் வருமான வரித்துறை சார்பில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐஐசிஎப் தலைவர் ஜபர் பரூக்கி கூறும்போது, “வருமான வரிச் சட்டம் 80 ஜி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் விண்ணப்பித்தோம். விண்ணப்பத்தில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக அப்போது வரிவிலக்கு கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் இந்தஆண்டு பிப்ரவரியில் விண்ணப்பித்ததில் தற்போது வருமான வரி விலக்குக்கான சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதையொட்டி நன்கொடைக்கான விழிப்புணர்வு முகாம்களை விரைவில் தொடங்கவுள்ளோம்” என்றார்.

இதுபோன்ற வரிவிலக்கு அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு கடந்த ஆண்டு அளிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.21,000 கோடி வசூலியாகி உள்ளது.

மசூதிக்காக இந்த வரிவிலக்கு பெற்ற இரண்டு தினங்களில் ரூ.20 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது. சுமார் 2,000 பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் அளவுக்கு இந்த மசூதி கட்டப்படுகிறது. இத்துடன், 300 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம், நூலகம், தேசிய ஒற்றுமைக்கான ஆய்வகமும் இந்த 5 ஏக்கர் மசூதி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x