

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாகனங்களில் செல்வோர் அலிபிரி மலை வழிப்பாதையில் செல்ல சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சோதனைச் சாவடியை கடந்ததும் அங்கு கார், பைக், மினி பஸ், ஜீப் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கடந்த மாதம் நடந்த தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இக்கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு ஆந்திர அரசின் ஒப்புதல் கிடைத்ததால், நேற்று முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
புதிய கட்டணத்தின்படி ஜீப், காருக்கு ரூ.15லிருந்து ரூ.50 ஆகவும், மினி லாரிக்கு ரூ.50லிருந்து ரூ.100 ஆகவும், ஜேசிபி மற்றும் அதிக சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ரூ.200 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளைப் போல், திருப்பதி-திருமலை இடையேயும் ஃபாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சிங்கிள் டிராக்கில் மட்டும் சோதனை அடிப்படையில் நேற்று முதல் ஃபாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டது.