

5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதன் விசாரணை ஜூன் 2ஆம் தேதி நடக்கிறது.
உலகம் முழுவதும் அடுத்த சில வருடங்களில் தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு பூமியில் அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் நடிகை ஜூஹி சாவ்லா இதை எதிர்த்து வழக்கே தொடர்ந்துள்ளார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி ஹரி ஷங்கர் வேறொரு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இது தொடர்பாகப் பேசியிருக்கும் சாவ்லா, "தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. தொழில்நுட்ப உலகம் தரும் நவீன சாதனங்களை நாங்கள் பயன்படுத்துவதில் மகிழ்கிறோம். தொலைத்தொடர்பு சேவையிலும்தான். ஆனால், தொலைத்தொடர்பு சேவைக்கான சாதனங்களைப் பயன்படுத்தும்போது நாங்கள் தொடர் குழப்பத்தில் இருக்கிறோம்.
ஏனென்றால் நாங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில், வயர்லெஸ் சாதனங்களில் இருந்தும், அலைப்பேசி கோபுரங்களிலிருந்தும் வெளியேறும் கதிர்வீச்சினால் மக்களின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்பதை நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று கூறியுள்ளார்.
மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் என அத்தனையும் இந்தக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் என்றும், இன்றைக்கு இருப்பதை விட 100 மடங்கு அதி தீவிரமாக இவை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்யவே முடியாது என்றும் ஜூஹி சாவ்லா தரப்பில் கூறப்பட்டுள்ளது.