Published : 01 Jun 2021 04:28 PM
Last Updated : 01 Jun 2021 04:28 PM

12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா? - பிரதமர் மோடி இன்று ஆலோசனை

12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கரோனா வைரஸ் 2-வது அலை பரவியதையடுத்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்தி வைத்தது. இதுபோலவே பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் கரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் தங்கள் விரிவான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்க மத்தியஅரசு கேட்டுக்கொண்டது.

இதன்படி பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அனுப்பியுள்ளன. ஆனால், என்ன மாதிரியான கருத்துக்களை அனுப்பியுள்ளன என்பது குறித்து மத்திய அரசு வெளியிடவில்லை.
தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அதேசமயம் மாற்று முறையில் மதிப்பீடு செய்யலாம் என சில மாநிலங்கள் கூறியுள்ளன.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிடவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சிபிஎஸ்இ திட்டப்படி முதலாவதாக பிரதான பாடங்களுக்கு மட்டும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வுகளை நடத்துவது, 2-வதாக மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்திலேயே குறைந்த நேரத்தில் முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது என இருவேறு பரிசீலனைகள் உள்ளன.

இதனிடையே 2-ம் வகுப்புத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரைணக்கு வந்தபோது கரோனா வைரஸ் பரவல்களுக்கு மத்தியில் 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மத்திய கல்வியமைச்சர் பொக்ரியால் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே அவர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. கல்வியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இன்றைய ஆலோசனையில் 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x