‘‘ஒரு தலைபட்சமானது’’- மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை அனுப்ப முடியாது: பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

‘‘ஒரு தலைபட்சமானது’’- மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை அனுப்ப முடியாது: பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
Updated on
1 min read

மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அழைக்கும் உத்தரவை ஏற்க முடியாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசின் முடிவு அதிர்ச்சியளி்ப்பதாகவும், ஒரு தலைபட்சமானது எனவும் விமர்சித்துள்ளார்.

யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். மேற்குவங்கத்தில் விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்காக அரைமணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அவர் மட்டுமின்றி மேற்குவங்க மாநில அதிகாரிகளும் தாமதமாகவே வந்தனர். மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாக பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.

இந்த விவகாரம் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பண்டாபாத்யாயாவை உடனடியாக பணியாளர் பயற்சி துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது.

கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆனால் இதற்கு மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில் ‘‘நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகரித்து அதற்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. மேற்குவங்கத்திலும் கரோனாவுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளோம்.

இந்த இக்கட்டான சூழலில் மேற்குவங்க தலைமைச் செயலாளர் அல்பன் பண்டோபாத்யாயாவை டெல்லிக்கு அழைக்கும் செயல் ஏற்க முடியாதது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த சூழலில் திடீர் மாற்றம் ஏன். இந்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒருதலைபட்சமானது. எனவே இந்த உத்தரவை உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in