Last Updated : 31 May, 2021 11:38 AM

 

Published : 31 May 2021 11:38 AM
Last Updated : 31 May 2021 11:38 AM

மத்திய விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது; தொடர்ந்து பணிகள் நடக்கலாம்: மனுவைத் தள்ளுபடி செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம்

மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “மத்திய விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தக் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடக்கலாம்" என்று மனுவைத் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது.

இந்த மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மையான பொதுநல மனு அல்ல என்பதால், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

டெல்லியில் கரோனா வைரஸ் 2-வது அலை உச்சகட்டத்தை எட்டியபோது, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் டெல்லியில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டது. அதை மேற்கோள் காட்டி மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தவும் உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாதிடுகையில், “இந்த மனு மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுநல நோக்கம் என்று குறுகிய கண்ணோட்டத்தில், குறிப்பிட்ட திட்டத்தை மட்டும் வைத்து இருக்கிறது. மனுதாரர் மற்ற கட்டிடங்களைப் பற்றியும் அங்கு பணியாற்றுவோர் குறித்தும் கவலைப்படவில்லை. இந்த மனு வழக்கத்துக்கு மாறானது, பொதுநல நோக்கத்துக்கு அப்பாற்பட்டது” எனத் தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிடுகையில், “டெல்லி பேரிடர் மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவை மத்திய விஸ்டா திட்டத்துக்கு மட்டும் எடுக்கக் கூடாது. நவம்பர் 30ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என விரைவுபடுத்தினால் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19, 21-ஐத் தூக்கி எறிந்துவிடுங்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கின் வாதங்கள் முடிந்த நிலையில் இன்று டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பாட்டீல், ஜோதி சிங் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது.

அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:

''மத்திய விஸ்டா திட்டம் தொடர்ந்து நடப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதியளித்துள்ளது. ஆனால், இந்த மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுநல நோக்கோடு இல்லை.

இந்தக் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கலாம். ஒட்டுமொத்த மத்திய விஸ்டா திட்டமும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. நாடாளுமன்றம் முழுமையாக இங்கு நடக்க வேண்டும். பொதுமக்கள் இந்தத் திட்டத்தின் மீது மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்.

இந்தக் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் முறையாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன்தான் செயல்படுகிறார்கள். பணியாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளிலும், கரோனா தடுப்பு நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால், இந்தத் திட்டத்தை நிறுத்தக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரரின் மனுவில் உண்மைத்தன்மை இல்லாததால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம்''.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x