Last Updated : 30 May, 2021 04:07 PM

 

Published : 30 May 2021 04:07 PM
Last Updated : 30 May 2021 04:07 PM

கரோனாவால் உயிரிழந்தவர்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய 3 அடுக்குக் குழு: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலத்தில் பாயும் கங்கை நதியில் உடல்கள் மிதந்து வந்ததைத் தொடர்ந்து, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய மத்திய, மாநில அரசு நிர்வாகிகள், உள்ளாட்சி நிர்வாகிகள் அடங்கிய குழுவை நியமிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை வினீத் ஜின்டால் என்பவர் வழக்கறிஞர் ராஜ் கிஷோர் சவுத்ரி மூலம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

''கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்து, இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும். ஆனால், ஆற்றின் கரை ஓரத்தில் புதைத்துச் செல்கின்றனர். பலமான காற்று அடித்து மணல் அடித்துச் செல்லும்போது உடல்கள் வெளியே தெரிந்து மக்களுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அது மட்டுமல்லாமல் கங்கை நதியிலும் ஏராளமான உடல்கள் வீசப்படுகின்றன. இந்த கங்கையின் நீர்தான் பல கிராமங்களுக்குக் குடிநீராகவும் கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்குப் பயன்படுகிறது. இதனால் தண்ணீர் அசுத்தமடைந்து, மக்களுக்குக் கிருமிகள் மூலம் புதிய நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.

மத்திய அரசின் கங்கை சுத்தம் செய்யும் இயக்கம், உத்தரப் பிரதேச அரசு, பிஹார் அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவைதான் கங்கை அசுத்தமடைவதற்குக் காரணம். கங்கை நதியில் செல்லும் அனைத்து உடல்களை அகற்றவும், கரை ஓரத்தில் புதைக்கப்பட்டுள்ள உடல்களை அகற்றி கண்ணியாக அதற்குரிய இடத்தில் இறுதிச்சடங்கு செய்யவும் உத்தரவிட வேண்டும். கங்கை நதியின் புனிதமும், அதன் உயிர்ச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

கங்கை நதிக்கரை ஓரம் வசிக்கும் கிராம மக்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீரை வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக வீட்டுக்கு வீடு சென்று ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும், தடுப்பூசி செலுத்தவும் உத்தரவிட வேண்டும்.

பல ஏழைகள் தங்களின் அன்புக்குரியவர்கள், உறவினர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதிச்சடங்கு செய்யப் பணம் இல்லாமல் இருக்கின்றனர். ஆனால், அவர்களிடம் இறுதிச்சடங்கு செய்யப் பணம் வசூலிக்கும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட வேண்டும்.

கரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகிகள் சார்பில் 3 அடுக்குக் குழுவை அமைக்க வேண்டும். இறுதிச்சடங்கு செய்ய உடல்களைக் கையாளும் ஊழியர்களுக்குப் போதுமான பிபிஇ ஆடைகள், கையுறை, முகக்கவசம், சானிடைசிங் வசதி போன்றவை வழங்கிட உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x