Last Updated : 30 May, 2021 01:58 PM

 

Published : 30 May 2021 01:58 PM
Last Updated : 30 May 2021 01:58 PM

கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உறுதியாக வெல்லும்: ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை

பிரதமர் மோடி | கோப்புப் படம்.

புதுடெல்லி

''கரோனாவுக்கு எதிரான முதல் அலையில் நாம் துணிச்சலுடன் போரிட்டோம். இந்த 2-வது அலையில் இந்த தேசம் நடத்திவரும் போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம். பல இயற்கை இடர்ப்பாடுகள் வந்தபோதும், மக்கள் துணிச்சலாக எதிர்கொண்டு, ஒழுக்கத்துடன், பொறுமையுடன் நடந்துகொள்வது பெருமையாக இருக்கிறது. அனைத்து மக்களையும் வணங்குகிறேன்'' என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியி்ல பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 77-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த 10 நாட்களாக இந்தியா டவ்-தே, யாஸ் புயல்களுக்கு எதிராகப் போராடியது. இந்த தேசத்தின் மக்களும் முழுவீச்சுடன் போராடியதால், மிகக்குறைவான உயிரிழப்புதான் ஏற்பட்டது. இதுபோன்ற கடினமான, அசாதாரண இயற்கைப் பேரிடர் சூழலில், புயல் பாதித்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர்.

அனைத்து மக்களுக்கும் இந்த நேரத்தில் நான் தலைவணங்குகிறேன்.
இந்தப் பேரிடரை எதிர்கொள்ள மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து பணியாற்றின. இந்தப் பேரிடர்களில் உயிரை இழந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

கரோனாவுக்கு எதிராக நாம் மிகப்பெரிய போரைச் செய்து வருகிறோம். நீர், நிலம், வான்வழி வழியாகத் தேவையான உதவிகளைப் பெற்று வருகிறோம். பெரும்பாலான நமது விஞ்ஞானிகள், வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுர்கள் போர்க்காலத்தில் செயல்படுவதுபோல் செயல்படுகின்றனர். அனைத்து மக்களின் நலனை மனதில் வைத்து இவர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், புரிதலோடும் பணியாற்றுகிறார்கள்.

ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், கிரியோஜெனிக் டேங்கர்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகின்றன. இந்தப் பணியில் இந்திய விமானப்படை, கப்பற்படை, டிஆர்டிஓ உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஒருபுறம் காலியான ஆக்சிஜன் டேங்கர்களை விமானப்படை கொண்டுவந்த நிலையில் மறுபுறம் அந்த டேங்கர்களை வைத்துப் புதிய ஆக்சிஜன் உற்பத்தி திட்டம் அமைக்கும் பணியும் நடக்கிறது.

கரோனா 2-வது அலையில் போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த சவால்களை ஆக்சிஜன் டேங்கர் லாரி ஓட்டுநர்கள், போர்க்காலத்தில் பணியாற்றுவதுபோல் செயல்பட்டு லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆக்சிஜன் டேங்கர்களைக் கொண்டு சென்ற ஓட்டுநர்கள் போர்வீரர்கள்தான். சாதாரண நாட்களில் 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும்போது இதுபோன்ற அசாதாரண நாட்களில் நாள்தோறும் 9,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் 33 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நண்பர்களை கரோனா முதன்முதலில் இந்தியாவில் பரவத் தொடங்கியபோது, ஒரு பரிசோதனைக் கூடம் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 2.500 பரிசோதனை மையங்கள் உள்ளன.

தொடக்கத்தில் சில ஆயிரம் மட்டுமே பரிசோதிக்கப்பட்ட நிலையில், இன்று நாள்தோறும் 20 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. தங்களைப் பாதுகாக்க பிபிஇ ஆடைகளை அணிந்து, வெப்பத்தைப் பொறுத்துக்கொண்டு சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

கரோனா பிரச்சினை நம் நாட்டின் ஒவ்வொரு துறையையும் பாதித்துள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலில் இருந்து வேளாண்துறைதான் பாதுகாத்து வருகிறது. உற்பத்தியை அதிகரித்து வருகிறது. அதனால்தான் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க முடிகிறது. கிசான் ரயில் மூலம் இதுவரை 2 லட்சம் காய்கறிகள்,பழங்கள் அனுப்பப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மிகக்குறைந்த செலவில் நல்ல விலை கொடுக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.

மே 30ஆம் தேதி 'மன் கி பாத்' நிகழ்ச்யில் போதும்போது இந்த அரசின் 7-வது ஆண்டு நிறைவு விழாவும் வந்துவிட்டது. இந்த 7 ஆண்டுகளும் இந்த தேசம், ஒவ்வொருவரின் ஆதரவு, ஒவ்வொருவரின் வளர்ச்சி, இப்போது ஒவ்வொருவரின் நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் எனக்குக் கடிதம் அனுப்புகிறார்கள். அதில் பலர் 70 ஆண்டுகளுக்குப் பின் எங்களுக்கு மின்வசதி, சாலை வசதி கிடைத்துள்ளது, வங்கி வசதி கிடைத்துள்ளது என நன்றி கூறுவதைப் பார்க்க முடிகிறது.

கடந்த 70 ஆண்டுகளில் 3.50 கோடி கிராமப்புற மக்களுக்கு மட்டுமே குடிநீர் வசதி இருந்தது. ஆனால், கடந்த 21 மாதங்களில் 4.50 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கியுள்ளோம். மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. கரோனா முதல் அலையைத் துணிச்சலோடு எதிர்கொண்டோம். 2-வது அலைக்கு எதிராக நாம் நடத்திவரும் போரிலும் வெல்வோம்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x