Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM

விவசாயிகளை காப்பாற்றுவது யார்?- `பெடா'வுக்கு அமுல் தலைவர் கேள்வி

குஜராத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து அதை பல்வேறு பால் பொருளாகத் தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது அமுல் நிறுவனம்.

மாடுகளின் பால் உற்பத்திக்குப் பதிலாக தாவர வித்துகளின் மூலம் பால் தயாரிப்புப் பணியில் ஈடுபடலாம் என்று பெடா அமைப்பு சமீபத்தில் அமுல் நிறுவனத்துக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தது. இதற்கு அமுல் நிறுவனத் தலைவர் ஆர்எஸ் சோதி அளித்த பதில் விவரம் வருமாறு:

பெடா அமைப்பினர் அமுல் நிறுவன செயல்பாடுகளின் அடிப்படை உண்மைகளைப் புரியாமல் வலியுறுத்தியுள்ளனர். 10 கோடி மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாடு எவ்விதம் பயனளிக்கும். இப்போது மாடு வளர்த்து பால் விநியோகிக்கும் விவசாயிகளில் 70 சதவீதம் பேரிடம் நிலம் கிடையாது. இவர்களால் தாவர வித்துகளை சாகுபடி செய்ய முடியாது. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி என்ன? மேலும் அதிக விலைக்கு விற்பனையாகும் வீகன் பால் எனப்படும் தாவர வித்துகளின் பாலை எவ்வளவு பேரால் வாங்க முடியும்.

அமுல் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பாலைக் கொள்முதல் செய்து அதை பதப்படுத்தி பல்வேறு பொருள்களாக விற்பனை செய்கிறது. ஆனால் பெடா அமைப்பு கூறுவது போல சோயா பால் தயாரிப்பு செய்யத் தொடங்கினால் அது விவசாயிகள் பணத்தை நிறுவனங்கள் பறிக்க வழியேற்படுத்திவிடும். சோயா பால் விலை அதிகம். அதை நடுத்தர குடும்பத்தினர் வாங்கி பயன்படுத்த இயலாது. 10 கோடி லிட்டர் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க பெடா நினைக்கிறதா? 75 ஆண்டுகளாக ஒரு வலுவான கூட்டுறவு கட்டமைப்பை உருவாக்கி ஏழை விவசாயிகளின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் அமைப்பை மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயா பால் மூலம் அழிக்க நினைக்கிறதா என்று ஆர்.எஸ்.சோதி கேள்வி எழுப்பி உள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x