Published : 29 May 2021 08:31 PM
Last Updated : 29 May 2021 08:31 PM

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி

கரோனா தொற்று காரணமாகப் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்/ தத்து பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு, பிஎம் கேர்ஸ் நிதி மூலம் ஆதரவளிக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அத்தகைய குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்கான முக்கியக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அப்போது பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் அறிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்தைக் குழந்தைகள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றும் வலிமைமிக்க குடிமக்களாக குழந்தைகள் உருவாவதற்கும், ஒளிமயமான எதிர்காலம் அவர்களுக்குக் கிடைப்பதற்கும் ஆதரவளித்து, அவர்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் அரசு செய்யும் என்று பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

''ரூ.10 லட்சம் வைப்புத் தொகை:

கரோனா தொற்று காரணமாக பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்/ தத்து பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு, 18 வயதாகும் போது பயன்படும் வகையில் ரூ 10 லட்சம் வைப்புத் தொகையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பிஎம் கேர்ஸ் அளிக்கும்.

இந்தத் தொகை 18 வயதில் இருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் கல்வியின் போது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான உதவித்தொகையை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும்.

அவர்களுக்கு 23 வயதானவுடன், தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்காக மொத்தப் பணமும் பயனாளிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்விக்கான ஆதரவு:

*10 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ குழந்தைக்குச் சேர்க்கை வழங்கப்படும்.

குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமைச் சட்டத்தின்படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும்.

சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான செலவையும் பிஎம் கேர்ஸ் ஏற்கும்.

*11-18 வயதுடைய குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதயா பள்ளி போன்ற உண்டி-உறைவிட மத்திய அரசுப் பள்ளிகளில் குழந்தைக்குச் சேர்க்கை வழங்கப்படும்.

குழந்தை ஒரு வேளை பாதுகாவலர்/ தாத்தா-பாட்டி /உறவினரின் பராமரிப்பில் இருந்தால், அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும்.

குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமைச் சட்டத்தின்படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும்.

சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான செலவையும் பிஎம் கேர்ஸ் ஏற்கும்.

உயர்கல்விக்கான ஆதரவு:

ஏற்கெனவே உள்ள கல்விக் கடன் விதிகளின் படி, இந்தியாவில் தொழில் கல்வி/ உயர் கல்வி படிப்பதற்கான கல்விக் கடன் பெறுவதற்கு குழந்தைக்கு ஆதரவு வழங்கப்படும். இதற்கான வட்டியை பிஎம் கேர்ஸ் செலுத்தும்.

இளநிலை/ தொழில் கல்விக்கான கட்டணத்திற்குச் சமமான உதவித் தொகை மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள உதவித்தொகை திட்டங்களுக்கு குழந்தை தகுதியாக இல்லையெனில், அதற்கு சமமான ஊக்கத்தொகையை பிஎம் கேர்ஸ் வழங்கும்.

* மருத்துவக் காப்பீடு

ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டுடன் கூடிய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (பிஎம்-ஜே) பயனாளிகளாக அனைத்துக் குழந்தைகளும் சேர்க்கப்படுவர். குழந்தைகளுக்கு 18 வயதாகும் வரை பிரீமியம் தொகையை பிஎம் கேர்ஸ் செலுத்தும்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x