Published : 29 May 2021 11:19 AM
Last Updated : 29 May 2021 11:19 AM

பிரதமர் மோடி கூட்டத்தை புறக்கணித்தாரா மம்தா பானர்ஜி? - மேற்குவங்க தலைமைச் செயலாளர் டெல்லிக்கு அழைப்பு: மத்திய அரசு பதிலடி

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக மேற்குவங்க தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அழைத்து பதிலடி கொடுத்துள்ளது மத்திய அரசு.

யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். முதலில் ஒடிசா சென்ற அவர் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பிரதமர் மோடி மேற்குவங்கம் சென்றார். விமானம் மூலம் புயல் பாதிப்புகளை பிரதமர் நேரடியாக கண்டறிந்த பிறகு மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்காக அரைமணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் மட்டுமின்றி மேற்குவங்க மாநில அதிகாரிகளும் தாமதமாகவே வந்தனர்.

பிரதமர் மோடி கூட்டம் நடைபெற்ற நேரத்தில் புயல் சேதங்களை பார்வையிடச் சென்ற மம்தா

பின்னர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாக பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். பிரதமரிடம் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவை என மனுவை அளித்து விட்டு வேறு பணிகள் இருப்பதா கூறி புறப்பட்டுச் சென்றார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது. மம்தா பானர்ஜிக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் அலபன் பண்டாபாத்யாயாவை உடனடியாக பணியாளர் பயற்சி துறைக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x