Last Updated : 28 May, 2021 06:07 PM

 

Published : 28 May 2021 06:07 PM
Last Updated : 28 May 2021 06:07 PM

டெல்லியில் கரோனா கட்டுக்குள் வந்தது; ஊரடங்கு தளர்வு 31ஆம் தேதி முதல் தொடக்கம்: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, வரும் 31ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாகச் செய்யப்படும். முதலில் கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளை ஒரு வாரத்துக்கு இயக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார்.

டெல்லியில் கடந்த மாதம் 20ஆம் தேதி கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 29 ஆயிரம் பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தீவிரமான, தளர்வுகள் அற்ற ஊரடங்கை முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்தார். ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், அங்கு கரோனா பாசிட்டிவ் 1.5 சதவீதத்துக்கும் கீழாகச் சரிந்தது. தினசரி பாதிப்பு 1,100 ஆகச் சரிந்தது.

இதையடுத்து டெல்லியில் அன்-லாக், அதாவது ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும் பணியை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

''டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக உணர்கிறேன். ஆதலால், வரும் 31ஆம் தேதி முதல் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும் நடவடிக்கை தொடங்கும். முதலில் ஒரு வாரத்துக்கு கட்டுமானப் பணிகளுக்கும், தொழிற்சாலைகள் இயங்கவும் அனுமதிக்கப்படும். இதன் மூலம் கரோனா வைரஸுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை.

கரோனா வைரஸிலிருந்து தப்பித்த மக்கள் பட்டினியில் இறந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கும், பொருளாதார நடவடிக்கைக்கும் சமநிலை கொண்டுவர வேண்டும்.

டெல்லி பேரிடர் மேலாண்மை அமைப்புடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் டெல்லியில் படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்த முடிவு செய்தோம். டெல்லிக்குள் வாழ்வாதாரம் தேடி வந்துள்ள தினக்கூலிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், ஆகியோருக்கு நிவாரணம் அளி்க்கும் வகையில் அன்-லாக் இருக்கும். அவர்களை மனதில் வைத்து தொழிற்சாலை செயல்பட அனுமதிக்கிறோம். கட்டுமானப் பணிகளை அனுமதிக்கிறோம்.

மருத்துவ வல்லுநர்கள் அறிவுரைப்படி, வழிகாட்டுதலின்படி, களச்சூழலை ஆய்வு செய்து ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படும். ஒருவேளை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தால், உடனடியாக ஊரடங்கு தளர்வுகள் நிறுத்தப்படும். மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

டெல்லியில் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், ஐசியூ படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், கரோனாவுக்கு எதிரான போர் மட்டும் முடியவில்லை''.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x