Published : 27 May 2021 05:56 PM
Last Updated : 27 May 2021 05:56 PM

இந்தியாவின் தடுப்பூசி செயல்முறை; கட்டுக்கதைகளும் உண்மைகளும்: நிதி ஆயோக் உறுப்பினர் விளக்கம்

இந்தியாவின் தடுப்பூசி செயல்முறை பற்றி நிதி ஆயோக் (சுகாதாரம்) மற்றும் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு தலைவருமான டாக்டர் வினோத் பால் விளக்கமித்துள்ளார்.

இதுகுறித்து நிதி ஆயோக் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி திட்டம் பற்றி பல கட்டுக்கதைகள் வலம் வருகின்றன. இந்த கட்டுக்கதைகள், அரைகுறை அறிக்கை மற்றும் பாதி உண்மைகள் மற்றும் அப்பட்டமான பொய்கள் காரணமாக வெளியானவை.

நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) மற்றும் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு (NEGVAC) தலைவருமான டாக்டர் வினோத் பால், இந்த கட்டுக்கதைகளுக்கு பதில் அளித்து, இந்த பிரச்னைகளுக்கான உண்மைகளை தெரிவிக்கிறார்.

கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் இங்கே:

கட்டுக்கதை 1: வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

உண்மை: 2020 ஆம் ஆண்டு மத்தியிலிருந்தே, அனைத்து முக்கிய சர்வதேச தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பைசர், ஜே அண்டு ஜே மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அந்த நிறுவனங்கள் இந்தியாவில் தடுப்பூசிகளை விநியோகிக்கவும் மற்றும் இந்தியாவில் அவர்களின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும் அனைத்து உதவிகளை மத்திய அரசு வழங்கியது.

கட்டுக்கதை 2: உலகளவில் கிடைக்கும் தடுப்பூசிகளை, மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

உண்மை: அமெரிக்காவின் எப்டிஏ, இஎம்ஏ, இங்கிலாந்தின் எம்எச்ஆர்ஏ மற்றும் ஜப்பானின் பிஎம்டிஏ போன்ற அமைப்புகள் அனுமதித்த மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாடு பட்டியலில் உள்ள தடுப்பூசிகள் இந்தியாவுக்குள் நுழையும் நடைமுறைகளை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் எளிதாக்கியது. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் பரிசோதனை செய்ய தேவையில்லை. இதர நாடுகளில் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த தடுப்பூசிகளின் பரிசோதனை தேவைகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் விதிமுறை தற்போது மேலும் திருத்தப்பட்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம், எந்த வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்தின் விண்ணப்பமும் நிலுவையில் இல்லை.

கட்டுக்கதை 3: தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

உண்மை: 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே, அதிக நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உதவி வருகிறது.

கட்டுக்கதை 4: கட்டாய உரிமம் முறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்

உண்மை: இது முக்கியமான விதிமுறை இல்லை என்பதால், கட்டாய உரிமம் மிக மிக விருப்பமான தேர்வு அல்ல. ஆனால், தீவிர பங்களிப்பு, ஊழியர்களுக்கு பயிற்சி, மூலப் பொருட்களை திரட்டுதல், அதிக அளவு உயிர் பாதுகாப்பு ஆய்வகங்கள் போன்றவைதான் தேவை.

கட்டுக்கதை 5: மத்திய அரசு தனது பொறுப்புகளை மாநிலங்களிடம் விட்டுள்ளது.

உண்மை: தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதியளிப்பது முதல் உற்பத்தியை அதிகரிக்க உடனடி அனுமதி அளிப்பது, இந்தியாவுக்கு வெளிநாட்டு தடுப்பூசிகளை கொண்டு வருவது வரை மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.

கட்டுக்கதை 6: மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை வழங்குவதில்லை.

உண்மை: ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்கள்படி, வெளிப்படையான முறையில், மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.

கட்டுக்கதை 7: குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உண்மை: தற்போது வரை, உலகில் எந்த நாடும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை. உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரைக்கவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x