Last Updated : 27 May, 2021 05:32 PM

 

Published : 27 May 2021 05:32 PM
Last Updated : 27 May 2021 05:32 PM

லட்சத்தீவில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுக: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

லட்சத்தீவில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற பிரதமர் மோடி தலையிட வேண்டும், மக்களின் எதிர்ப்பைத் தண்டித்து, ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

லட்சத்தீவுக்கு புதிய நிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் கோடா படேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

அப்போது இருந்து அவர் செய்துவரும் பல்வேறு சீர்திருத்தங்கள் லட்சதீவில் பூர்வகுடிகளாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதால், எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தீவில் வசிக்கும் மக்களில் 99 சதவீதத்தினர் பட்டியலினத்தவர்கள், அதிலும் பெரும்பகுதி முஸ்லிம் மக்கள்தான். அங்கு மது பார் கிடையாது, குற்றங்கள் எண்ணிக்கையும் அங்கு மிகக்குறைவாகும்.

இந்நிலையில் அங்கு புதிதாகப் பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பள்ளிகளில் மதிய உணவின்போது வழங்கப்படும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. மதுபார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அங்குள்ள மீனவ மக்கள் தங்கள் வலைகளை காயவைக்கவும், படகுகளையும் நிறுத்தும் இடம் தடை செய்யப்பட்டது.

இதுபோன்ற பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளால் மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர்.

லட்சத்தீவு நிர்வாகி அதிகாரி பிரஃபுல் படேலை மாற்றக் கோரி ஏற்கெனவே கேரள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இந்நிைலயில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

லட்சத்தீவில் புதிய சீர்திருத்தம் என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். லட்சத்தீவு மக்கள் வளர்ச்சிக் கண்ணோட்டம் உடையவர்கள் அவர்களின் வாழ்க்கை முறையையும், ஆசைகளையும் மதிக்க வேண்டும்.

ஆனால், லட்சத்தீவு நி்ர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேல் மீதும் தங்கள் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு ஆளாகுமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளை கலந்தாய்வு செய்யாமல் பிரஃபுல் படேல் தன்னிச்சையாக முடிவுகளையும், சீ்ர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளார். இந்த தன்னிச்சையான செயலுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவி்த்து வருகிறார்கள்.

மக்களின் வாழ்வாதாரம், நிலையான வளர்ச்சி ஆகியவை குறுகியகால வர்த்தக லாபத்துக்காக தியாகம் செய்யப்படுகிறது. 2 குழந்தைகளுக்கு மேல் உள்ள பஞ்சாயத்து நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என பஞ்சாயத்து வரைவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சமூகவிரோத செயல்கள் ஒழுங்குமுறைச் சட்டம், லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவந்துள்ளார், மதுபானங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளா். இவை அனைத்தும் அந்தத் தீவின் பூர்வகுடி சமூகத்தின் கலாச்சார, மதத்துக்கும் எதிரானதாக இருக்கிறது.

மீனவர்கள் தங்கள் வலைகளையும், படகுகளையும் நிறுத்தும் இடங்கள் இடிக்கப்பட்டுள்ளன, பல்வேறு துறைகளிலும் பணியாற்றிய ஒப்பந்தப் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கரோனா கட்டுப்பாடுகளை நீக்கி, அங்கு வைரஸ் பரவ வழி செய்துள்ளார்.

குற்றங்கள் மிகவும் குறைவாக இருக்கும் அந்த யூனியன் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரி்க்கிறேன் எனக் கொடூரமான விதிகளைப் புகுத்தியுள்ளார். எதிரத்தால் தண்டனையும், ஜனநாயகத்தை குறைத்தும் மதிப்பிடுகிறார்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x