Last Updated : 27 May, 2021 01:39 PM

 

Published : 27 May 2021 01:39 PM
Last Updated : 27 May 2021 01:39 PM

தடுப்பூசி குறித்து தவறாகப் பிரச்சாரம்: பாபா ராம்தேவ் மீது தேசவிரோதச் சட்டத்தில் நடவடிக்கை : பிரதமர் மோடிக்கு ஐஎம்ஏ வலியுறுத்தல்

யோகா குரு பாபா ராம் தேவ் | கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா தடுப்பூசி குறித்து தவறாகவும், உண்மைக்கு மாறாகவும் பிரச்சாரம் செய்துவரும் யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசவிரோதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளது.

அலோபதி மருத்துவம் குறித்து தவறானத் தகவல்களையும் பிரச்சாரத்தையும் யோபா குரு பாபா ராம்தேவ் முன்னெடுத்ததால் இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது. மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கண்டித்ததைத் தொடர்ந்து பாபா ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற்று, வருத்தம் கோரினார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை முடிந்த சிலநாட்களுக்குள் பாபா ராம் தேவ் மீண்டும் பேசியுள்ளார். சமீபத்தில் பாபா ராம்தேவ் பேசிய வீடியோவில், “ அலோபதி மருத்துவத்தாலும், தடுப்பூசியாலும் 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பிரதமர் மோடியின் பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளது. தடுப்பூசி குறித்து தவறான பிரச்சாரத்தை செய்துவரும் பாபா ராம்தேவை உடனடியாக தேசவிரோதச் சட்டத்தின் நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தி நேற்று கடிதம் எழுதியுள்ளது.
ஐஎம்ஏ தலைவர் மருத்துவர் ஜெயலால் எழுதிய கடிதத்தி்ல் கூறப்பட்டுள்ளதாவது:

அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும், தடுப்பூசி செலுத்த வேண்டும், கரோனாவை வெல்ல தடுப்பூசிதான் ஆயுதம் என்ற உங்களின் (பிரதமர் மோடி) பிரச்சாரத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்திய மருத்துவக் கூட்டமைப்பு செயல்படுகிறது. மத்திய அரசின் தீவிரமான முயற்சியாலும், மருத்துவர்களின் நடவடிக்கையாலும் இதுவரை 20 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திவிட்டனர். உலகிலேயே மிக வேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடாக இந்தியா மாறிவருகிறது.

ஆனால், தடுப்பூசிக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். சமீபத்தில் பாபா ராம் தேவ் வெளியிட்ட இரு வீடியோவில், தடுப்பூசியின் இரு டோஸ்களை எடுத்துக்கொண்ட 10 ஆயிரம் மருத்துவர்கள், லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால் உயிரிழந்துள்ளனர். அலோபதி முட்டாள்தனமான மருத்துவம், அதனால்தான் கரோனாவுக்கு சிகிச்சை பெறும் மக்கள் அலோபதி மருத்துவத்தால் ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஐசிஎம்ஆர் வழங்கும் விதிகளைப்பின்பற்றி லட்சக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறோம். ஆனால்,சிலர் அலோபதி மருத்துவம் மக்களைக் கொல்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் ,இந்திய மருத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கும் சவால் விடுக்கிறார்.

இந்திய மருத்துவக் கூட்டமைப்பு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிமுகம் செய்யும், ஊக்குவிக்கும் எந்த மருந்துக்கும் எதிரானவர்கள் அல்ல. சில மருந்துகள் அமைச்சகத்தின் ஒப்புதலின்றி தவறாக விளம்பரப்படுத்தப்படுகின்றன, ஊக்குவிக்கப்படுகின்றன என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம்.

கரோனாவுக்கு எதிரானப் போரில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களை இழந்துள்ளது. முதல் அலையில் தடுப்பூசி கிடைக்காததால் பல மருத்துவர்கள் உயிரிழந்தனர், 2-வது அலையில் தடுப்பூசி கிடைத்தும் அதை செலுத்திக்கொள்ள முடியாமல் பல மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

பாபா ராம் தேவ் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை மக்களுக்குவழங்கி தடுப்பூசி குறித்து வெறுப்பை ஏற்படுத்துகிறார், அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதைத் தடுக்கிறார். கிராமங்களில் தடுப்பூசி செலுத்த செல்லும் ஆஷா பணியாளர்கள், பாபா ராம்தேவ் வார்த்தையை நம்பும் மக்களால் தாக்கப்படலாம். தடுப்பூசி குறித்து பரவலாக மக்கள் மனதில் அச்சமும், பதற்றத்தையும் பாபா ராம்தேவ் உருவாக்குகிறார்

தடுப்பூசி குறித்து தங்கள் சுயநலனுக்காக, மூடநம்பிக்கைகளையும், பொய்யான தகவல்களைக் கூறி, தவறாகப் பிரச்சாரம்செய்யும் பாபா ராம்தேவ் உள்பட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மத்திய அரசின் தடுப்பூசிக்கொள்கைக்கே விரோதமானது.

பாபா ராம் தேவ் உள்ளிட்ட இதுபோன்ற நபர்கள் மீது தாமதிக்காமல் தேசவிரோதச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.கரோனாவை எதிர்த்துப் போராடி வரும் மருத்துவர்கள் இதுபோன்ற கருத்தால், பொய்யான பிரச்சாரங்களால் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க கடும் நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும்

இவ்வாறு அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x