Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆந்திர ஆயுர்வேத மருத்துவர்; முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் பார்சலில் கரோனா மருந்து- நெல்லூரில் கள்ளச்சந்தையில் விற்பனை அதிகரிப்பு

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் ஆனந்தய்யாவின் மருந்தை எலிகள், முயல்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து நேற்று நேரில் ஆய்வு செய்த சந்திரகிரி எம்எல்ஏ பாஸ்கர்ரெட்டியிடம் (வலது) ஆனந்தைய்யாவின் சிஷ்யர் ஒருவர் விளக்கம் தருகிறார்.

நெல்லூர்

ஆந்திராவில் கரோனா தொற்றுக்குமருந்து தயாரித்த ஆயுர்வேத வைத்தியர், தற்போது ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அங்கு அவர் தயாரிக்கும் மருந்துகள் மிக முக்கிய பிரமுகர்களுக்கு (விஐபி) மட்டும் பார்சலில் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தில் ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கி, வைத்தியம் பார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் கரோனா நோயாளிகளுக்காக பல மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்தார். இது நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணப்பட்டினம் வரத் தொடங்கினர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்து உண்மையில் கரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு ஐசிஎம்ஆர் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார். அதுவரை ஆனந்தய்யாவின் மருந்து விநியோகத்தை நிறுத்துமாறும் அவர் அறிவுறுத்தியதால், போலீஸார் மற்றும் வருவாய் அதிகாரிகள் தலையிட்டு அவரதுமருந்து விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவக் குழுகிருஷ்ணப்பட்டினம் சென்று, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் அக்குழு அறிவித்தது.

இந்த சூழலில், ஆனந்தய்யா நெல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரகசியமாக தங்கவைக்கப்பட்டிருப்பதை தெலுங்கு ஊடகம் ஒன்று வெட்ட வெளிச்சமாக்கியது. அங்கு அவர், தனதுசிஷ்யர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் கரோனா மூலிகை மருந்தை தயாரித்து வருவதையும் அந்த ஊடகம் ஒளிபரப்பியது. இந்த ரகசிய இடத்தில் ஆளும் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனந்தய்யா, கரோனா மருந்து தயாரித்து, அவற்றை ஆந்திரா, தெலங்கானா, டெல்லியில் உள்ளவிஐபிக்களுக்கு மட்டும் ஆளும் கட்சியினர் ரகசியமாக அனுப்பி வைப்பதாகவும் அந்த ஊடகம் வீடியோ ஆதரங்களுடன் செய்தியை வெளியிட்டது.

இதுபோன்ற சூழலில், ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை திருப்பதியில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் நேற்று முதல் எலிகள், முயல்களுக்கு கொடுத்து பரிசோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மருந்து குறித்து முழுமையாக அனைத்து பரிசோதனைகளையும் செய்த பிறகு, இதுதொடர்பான அறிக்கை மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அரசுகள் அனுமதி வழங்கினால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் மருந்து தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவோம் என்றும் சந்திகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி கூறினார்.

இதற்கிடையே, நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.1,500 முதல் 2,000 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x