Last Updated : 26 May, 2021 10:37 AM

 

Published : 26 May 2021 10:37 AM
Last Updated : 26 May 2021 10:37 AM

12-ம் வகுப்பு தேர்வு எவ்வாறு நடத்துவது? இரு முக்கிய ஆலோசனைகளை வழங்கிய மாநிலங்கள்: ஜூன் 1-ம்தேதிக்குள் மத்திய அரசு முடிவு


கரோனா வைரஸ் 2-வது அலைக்கு மத்தியில் எவ்வாறு 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டதையடுத்து, இரு முக்கிய ஆலோசனைகளை பெரும்பாலான மாநிலங்கள் அனுப்பியுள்ளன. இதையடுத்து, ஜூன் 1ம்தேதிக்குள் முக்கிய முடிவை மத்தியஅ ரசு எடுக்க உள்ளது.

இதன்படி, 12ம் வகுப்புகளுக்கு முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை குறைந்த நேரத்தில் மாணவர்கள் பயிலும் அந்தந்தப் பள்ளிக்கூடத்திலேயே நடத்துவதும், இரண்டாவதாக, தேர்வு நடத்தும் முன் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளன.

கரோனா வைரஸ் 2-வது அலைக்கு மத்தியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அரசுகளுடன் மத்திய கல்வி்த்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மாநில அரசுகள் தங்கள் விரிவான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் செவ்வாய்க்கிழமைக்குள்(நேற்று) அனுப்பி வைக்கவும் மத்தியஅரசு கேட்டுக்கொண்டது.

இதன்படி பெரும்பாலான மாநிலங்கள் தங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் நேற்று அனுப்பியுள்ளன.

ஆனால், என்ன மாதிரியான கருத்துக்களை அனுப்பியுள்ள என்பது குறித்து மத்திய அரசு வெளியிடவில்லை என்றாலும், மத்திய கல்வி்த்துறை அமைச்சக வட்டாரங்கள், அந்தந்த மாநில அரசுகள் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிபிஎஸ்இ திட்டப்படி 12ம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் நடத்தவும், தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதம் வெளியிடவும் முடிவெடுத்துள்ளது. தேர்வு நடத்த இரு வாய்ப்புகளை வைத்துள்ளது, அதில், முதலாவதாக பிரதான பாடங்களுக்கு மட்டும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வுகளை நடத்துவது, 2-வதாக மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்திலேயே குறைந்த நேரத்தில் முக்கியப் பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது எனத் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே கரோனா காலத்தில் தேர்வுகளை நடத்துவது தங்களின் உயருக்கு ஆபத்தானது, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கூறி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதற்கிடையே மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ பெரும்பாலான மாநிலங்களிடம் இருந்து 12ம் வகுப்பு தேர்வு குறித்து கருத்துக்கள் வந்துள்ளன. தேர்வுகளை நடத்த வேண்டும் என்றுதான் பெரும்பாலான மாநிலங்கள் தெரிவி்த்துள்ளன. அனைத்து தரப்பினருடன் விரிவாக ஆலோசித்து ஜூன் 1ம் தேதிக்குள் முக்கிய முடிவு அறிவிக்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.

டெல்லி அரசைப் பொருத்தவரை, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டு தேர்வுகளை நடத்துங்கள் அல்லது தேர்வுகளை ரத்து செய்யுங்கள். அல்லது குறைந்தநேரத்தில் அந்தந்தப் பள்ளியிலேயே தேர்வுகளை நடத்துங்கள் எனத் தெரிவித்துள்ளது.

12்ம் வகுப்பு மாணவர்களுக்கு கரோனா காலத்தில் தேர்வு நடத்தத் தேவையில்லை என்று திட்டவட்டமாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின், அவர்கள் பயிலும்பள்ளிக்கூடத்திலேயே குறைந்த நேரத்தில் தேர்வுகளை நடத்தலாம் என்று பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், கேரளா, பிஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள், மாணவர்கள் தேர்வுகளை ரத்து செய்து, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஎஸ்இ வாரியத்தின் முக்கிய அதிகாரி கூறுகையில்” 19 முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க திட்டமிட்டுள்ளோம். ஆகஸ்ட் மாதம்தான் தேர்வு நடத்த முடிவுசெய்திருப்பதால் இன்னும் 3 மாதங்கள் இடைவெளி இருக்கிறது. முடிவுகளை அறிவிக்கவும் செப்டம்பர் மாதம்வரை ஆகலாம்.

ஒருவேளை கரோனா பாதிப்பால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாவிட்டாலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடத்திலேயே 90 நிமிடங்களில் குறைந்த கேள்விகளுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பையும் வழங்க இருக்கிறோம். வழக்கமாக 3 மணிநேரம் நடக்கும் தேர்வு 90 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டு அப்ஜெக்டிவ் முறை, சிலவரிகளில் பதில் அளித்தல் கேள்விகள் மட்டும் கேட்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x