Published : 26 May 2021 08:42 AM
Last Updated : 26 May 2021 08:42 AM

யாஸ் புயல்  தம்ரா துறைமுகம் அருகே இன்று கரையை கடக்கிறது:  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

யாஸ் புயல் ஒடிசா மாநிலம் தம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகல் கரையைக் கடக்கும் என்று தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்து உள்ளது.

கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது.

இது ஒடிசாவின் பாலசோர் பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் பாரதீப் பகுதியில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் தீவிரமடைந்து ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் தம்ரா துறைமுகம் அருகே இன்று காலை தீவிரமடையும்.

இதன்பின்னர் ஒடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதியில் பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே தம்ரா துறைமுகத்தின் வடக்கு மற்றும் பாலசோரின் தெற்கு பகுதியருகே இன்று நண்பகல் அதி தீவிர சூறாவளி புயலாக கடக்கும்.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று என்று கணிக்கப்பட்டுள்ளது. யாஸ் புயல் காரணமாக பிஹார் மாநிலத்தில் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மழை பெய்யக் கூடும்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 45 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் முகாமிட்டுள்ளன. ஒடிசாவிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள னர். வங்க கடலில் மீன்பிடிப் பில் ஈடுபட்டிருந்த 265 படகுகள்பத்திரமாக கரைக்கு திரும்பியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

யாஸ் புயல் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சந்திபூர் பகுதியில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் பாலசோர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x