

யாஸ் புயல் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே இன்று கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஒடிசாவில் பலத்த மழை கொட்டி வருகிறது.
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது.
இது ஒடிசாவின் பாலசோர் பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் பாரதீப் பகுதியில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா - மேற்குவங்கம் கடற்கரை பகுதியில் இன்று மதியம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று என்று கணிக்கப்பட்டுள்ளது. யாஸ் புயல் காரணமாக பிஹார் மாநிலத்தில் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 45 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் முகாமிட்டுள்ளன.
ஒடிசாவிலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள னர். வங்க கடலில் மீன்பிடிப் பில் ஈடுபட்டிருந்த 265 படகுகள்பத்திரமாக கரைக்கு திரும்பியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, யாஸ் புயல் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சந்திபூர் பகுதியில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் பாலசோர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கேந்திரபாரா, பத்ராக், ஜகத்சிங்க்பூர், பாலசோர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் புயல், மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்கள் பாது காப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநில அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற் கொண்டனர். - பிடிஐ