Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM
நாடு முழுவதும் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. எனினும், இதற்காக ‘கோவின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
கரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்தவர்களில் சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில்தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக குறிப்பிட்ட மையங்களுக்கு செல்வதில்லை என்றும் இதனால் மருந்து வீணாவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, மருந்து வீணாவதைத் தடுப்பதற்காக முன்பதிவு செய்யாமல் நேரடியாக வரும் சிலருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்மார்ட்போன், இணைய வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், இந்த விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகள் உள்ளூர் நிலவரத்துக்கேற்ப இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 கோடி பேருக்கு தடுப்பூசி
மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரப்படி, 18 வயது முதல் 44 வயது பிரிவினரில் இதுவரை 1,06,21,235 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ் தானில் 13,17,060 பேர், பிஹாரில் 12,27,279 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT