Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM
புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, நிதியுதவி, போக்குவரத்து வசதி மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை உறுதிசெய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் 3 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் புலம்பெயரும் தொழிலாளர்களை பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப் பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவு நடைமுறை மிகவும் தாமதமாக செல்கிறது. இது தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பல்வேறு திட்டங்களின் பலன்களை அவர்கள் பெறுவதற்கு இந்த நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். மேலும் தொடர்ந்து கண்காணிப்பட வேண்டும்.
இது ஒரு கடினமான பணிதான். என்றாலும் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களுக்கான பலன்கள் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிட்டுள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட நபர்களை சென்றடைந்துள்ளதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “முறைசாரா தொழிலாளர்கள் குறித்து தேசிய அளவிலான தகவல் தொகுப்பை உருவாக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்றார்.
இதற்கு, “இந்தப் பணி நாடுமுழுவதிலும் நிறைவு செய்யப்படவேண்டும். பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே அனைத்து திட்டங்களின் பலன்கள் சென்றடைய வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT