Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM
கர்நாடக மாநிலம் குடகு அருகில் உள்ள குஷால்நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (40). இவரது மனைவி பிரபா (36) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மடிகேரி அரசு மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். அந்த சமயத்தில் அவரது செல்போன், ரூ.3 ஆயிரம் திருடுபோனது. இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, நவீன்குமார் மடிகேரி காவல் நிலையத்தில் செல்போனை கண்டுபிடித்து தர புகார்அளித்தார்.
இந்நிலையில், நவீன்குமாரின் மகள் ஹிருதிக்ஷா (12), குடகு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எனது அப்பா ஒரு கூலித் தொழிலாளி. அவர் மிகவும் கஷ்டப்பட்டு என் அம்மாவுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தார். அந்த செல்போனில் எங்கள் குடும்ப புகைப்படங்கள், நான் சிறுவயதில் இருந்தபோது எடுத்த வீடியோக்கள், என் அம்மா பாடிய பாடல்களின் குரல் பதிவுகள்போன்ற விவரங்கள் இருக்கின்றன. இப்போது என் அம்மாஇறந்துவிட்டதால் அவரை புகைப்படங்கள் வாயிலாக மட்டுமே பார்க்க முடியும். அந்த செல்போனை திருடியவர்கள் கொஞ்சம் மனசாட்சியுடன் யோசித்து கொடுத்து விடுங்கள். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மடிகேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT