Last Updated : 24 May, 2021 09:21 AM

 

Published : 24 May 2021 09:21 AM
Last Updated : 24 May 2021 09:21 AM

அலோபதி மருத்துவம் மீது அவதூறு: கருத்தைத் திரும்பப் பெற்று வருத்தம் கோரினார் பாபா ராம்தேவ்: மத்திய அமைச்சரால் முடிவுக்கு வந்த சர்ச்சை


ஆலோபதி மருத்துவம் குறித்து அவதூறாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்கு வருத்தம் தெரிவித்த யோகா குரு பாபா ராம்தேவ், தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

மத்திய சுகதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் பாபா ராம்தேவுக்கு கடிதம் எழுதி, அலோபதி மருத்துவம் குறித்து பேசியதை திரும்பப் பெறக் கோரி கூறியதைத் தொடர்ந்து பாபா ராம்தேவ் தன்னுடைய கருத்தை திரும்பப் பெற்றார்.

கடும் கண்டனம், எதிர்ப்பு

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அலோபதி மருத்துவம் குறித்து அவதூறாகப் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் “ அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல் என்றும் லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால்தான் உயிரிழக்கிறார்கள். ரெம்டெசிவிர், ஃபேபிஃப்ளூ உள்ளிட்ட மற்ற மருந்துகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டும் அவை கரோனா நோயாளிகளைக் காக்கவில்லை” என ஆதாரமற்ற தகவல்களைத் தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு(ஐஎம்ஏ) கடும் கண்டனம் தெரிவித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவி்த்திருந்தது. அதுமட்டுமல்லாமல் பாபா ராம்தேவை தொற்று நோய் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும் , பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி நிபந்தனையற்ற எழுத்துபூர்வ மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியது.

மேலும், டெல்லி மருத்துவக் கூட்டமைப்பு(டிஎம்ஏ) டெல்லி போலீஸில் பாபா ராம்தேவ் குறித்து புகார் அளித்துள்ளது. இதனால் பாபா ராம்தேவுக்கு சிக்கல் அதிகரித்துக்கொண்டே வந்தது.

அலோபதி மருத்துவம் பற்றி தெரியுமா

மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன்

இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் பாபா ராம்தேவுக்கு கடிதம் எழுதி, அவரின் கருத்துக்களை திரும்பப் பெற கேட்டுக்கொண்டார். ஹர்ஸவர்த்தன் எழுதிய கடிதத்தில் “ சின்னம்மை, போலியோ, எபோலா, சார்ஸ், காசநோய் போன்ற நோய்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீ்ர்கள். இந்த நோய்களை கணித்து, அதற்கு மருத்துவம் செய்து குணப்படுத்தியது அலோபதி மருத்துவம்தான். கரோனாவுக்கு எதிரான போரிலும் தடுப்பூசி முக்கியமான ஆயுதம், அதை வழங்கியதும் அலோபதி மருத்துவம்தான்.

உங்களின் வாதத்தின்படி நவீன மருத்துவம், சிறந்த மருத்துவர்களுக்கு எதிராக பேசவில்லை என்று கூறுகிறீர்கள். உங்கள் விளக்கம் ஏற்கும் அளவில் இல்லை. நீங்கள் தெரிவித்த கருத்துகள் இந்த நேரத்தில் எவ்வளவு தீவிரமானது என்பது தெரியும், களப்பணியில் உலகம் முழுவதும் தீவிரமாக ஈடுபட்டுள்ள கரோனா போர் வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உங்களின் அவதூறான, துரதிர்ஷ்டமான கருத்துக்களை திரும்பப் பெறுவீர்கள் என நம்புகிறேன்.

மக்களால் பெரிதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மனிதாரகிய நீங்கள் கூறும் கருத்து பெரிதும் மதிக்கப்படும்.நாட்டில் நிலவும்சூழல், நிலை ஆகியவற்றை உணர்ந்து கருத்துக்களை நீங்கள் பேசியிருக்க வேண்டும் என நம்புகிறேன்.

நீங்கள் கூறிய கருத்து அலோபதி மருத்துவத்தை மட்டும் கேள்விக்குள்ளாக்கவி்ல்லை, மருத்துவர்களின் திறமை, நோக்கம் ஆகியவற்றையும் கேள்விக்குள்ளாக்கியது முறையானது அல்ல. உங்களின் கருத்து மருத்துவர்களின் நம்பிக்கையை குலைத்து, கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்துவிடும்” எனத் தெரிவித்தார்.

வருத்தம் தெரிவித்த ராம்தேவ்

இதையடுத்து, பாபா ராம்தேவ் தனது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். ட்விட்டரி்ல் அவர் பதிவிட்ட கருத்தில் அவர் கூறியிருப்பதாவது
“ மதிப்பிற்குரிய சுகாதாரத்துறை அமைச்சரே, உங்கள் கடிதம் கிடைத்தது. நான் என்னுடைய முரண்பட்ட கருத்துக்களை திரும்பப் பெற்று, இந்த சர்ச்சைக்குப் முற்றுப்புள்ளி வைக்கிறேன். என்னுடைய கருத்துக்களுக்காக நான் வருந்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x