

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
இதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் முழுவதும் பாஜகவினரை குறிவைத்து அரசியல் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. இது
வரை நடைபெற்ற வன்முறைகளில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அருண் முகர்ஜி, பிரமிதா டே, பூபன் ஹால்டர், பிரசாந்த தாஸ் உள்ளிட்டோர் உச்ச
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: மேற்குவங்க அரசியல் வன்முறையில் இதுவரை 18 பேர்
உயிரிழந்துள்ளனர். பெண்கள்பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். மாநில அரசு, போலீஸ் ஆதரவுடன் வன்முறைகள் அரங்
கேறி வருகின்றன. உயிருக்கு அஞ்சி சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
அரசியல் வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க வேண்டும். மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு முகாம்களை அமைத்து அவர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க உதவி எண்களை அறிவிக்க வேண்டும்.
வன்முறையில் உடைமைகள், வாழ்வாரத்தை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வன்முறைகள் தொடர்பாக
விசாரிக்க விரைவு நீதிமன்றங்களைஅமைக்க வேண்டும். இவ்வாறு கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் சரண், பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு விரைவில் விசாரணைக்கு வருகிறது. - பிடிஐ