Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM
மகாராஷ்டிராவில் நேற்று 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதியில் கட்சிரோலி மாவட்டம்அமைந்துள்ளது. இது வனப்பகுதி நிறைந்த மாவட்டமாகும். சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது. இதன்காரணமாக கட்சிரோலி மாவட்டத்தில் நீண்டகாலமாக மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை நீடிக்கிறது.
கடந்த 1990-ம் ஆண்டில்மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்க மாநில காவல் துறை சார்பில் சி-60 கமாண்டோ படை அமைக்கப்பட்டது. கடந்த 2019 மே மாதம்தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீஸார் உயிரிழந்தனர். இதன்பிறகு கடந்த ஏப்ரல் 23-ம்தேதி கட்சிரோலி மாவட்டம் கட்டா போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பெமிலி மெட்பள்ளி பகுதியில் 6 லாரிகளை தீவிரவாதிகள் தீ வைத்து எரித்தனர்.
இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்தஏப்ரல் 28-ம் தேதி கட்சிரோலி மாவட்டத்தில் சி-60 கமாண்டோ படை நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக கட்சிரோலி மாவட்டத்தின் காதிமா வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை நேற்று அதிகாலை சி-60 கமாண்டோ வீரர்கள் சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே ஒன்றரை மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இறுதியில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 7 பேர் பெண்கள் ஆவர்.
எஸ்.பி. தகவல்
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அன்கிட் கோயல் கூறும்போது, "சுமார் 70 தீவிரவாதிகள் ஒருமலை உச்சியில் பதுங்கியிருந்தனர். அவர்களை 4 கமாண்டோ படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தின.
இதில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகிறோம். போலீஸ் தரப்பில் உயிரிழப்பு ஏற்படவில்லை. சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT