Published : 21 May 2021 04:46 PM
Last Updated : 21 May 2021 04:46 PM

இந்தியாவில் 50% மக்கள் முகக்கவசமே அணிவதில்லை: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் 50% மக்கள் முகக்கவசமே அணிவதில்லை எனவும், 14% பேர் மட்டுமே முறையாக முகக்கவசம் அணிவதாகவும் ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டி, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்காத சூழலில், ஒரே மாதத்தில் அவரால் 406 நபர்களுக்குத் தொற்றை ஏற்படுத்த முடியும்.

அதேபோல முகக்கவசம் அணிவதும் முக்கியம். கரோனா தொற்று ஏற்பட்ட ஒரு நபரும் தொற்றால் பாதிக்கப்படாத நபரும் முகக்கவசம் அணியாத சூழலில், தொற்றுப் பரவ 90 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இரண்டு நபர்களும் முறையாக முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் சூழலில், தொற்று அபாயம் கிட்டத்தட்ட இல்லை.

இந்தியாவில் 25 நகரங்களில் 2 ஆயிரம் மக்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின்படி, நாட்டில் 50% மக்கள் முகக்கவசமே அணிவதில்லை. மீதமுள்ள 50 சதவீத மக்களில், 64 சதவீத மக்கள் வாய் மட்டுமே மூடும் வகையில் முகக்கவசம் அணிகின்றனர். 20 சதவீத மக்கள் மோவாய்க்கு முகக்கவசம் அணிகின்றனர். 2 சதவீத மக்கள் கழுத்துக்கு முகக்கவசம் அணிகின்றனர். மீதமுள்ள 14% பேர் மட்டுமே முறையாக முகக்கவசம் அணிந்து செல்கின்றனர்.

நாடு முழுவதும் 8 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான கரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவான நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்’’.

இவ்வாறு சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x