

மும்பையின் அரபிக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பணப் பணியில் ஈடுபட்டிருந்த ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான பி-305 என்ற சிறிய ரக கப்பல் ஒன்று டவ்-தே புயல் காரணமாக நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்தப்பட்டிருந்தது.
எனினும், காற்றின் வேகம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் நங்கூரம் உடைந்து கப்பல் அடித்துச் செல்லப்பட்டது. இதில் பாறைகளில் மோதியதால் ஒருகட்டத்தில் அந்தக் கப்பல் மூழ்க தொடங்கியது. அதில் 261 ஊழியர்கள் இருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இந்தியக் கடற்படையினர், 4 கப்பல்கள், இரண்டு விமானங்கள் மூலமாக அந்தக் கப்பலில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் வரை 188 பேர் மீட்கப்பட்டனர். 26 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மீட்புப் பணியின் போது,மேலும் 11 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது. மீதமுள்ள 47 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. -பிடிஐ